மும்பை: இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா டெஸ்ட் அணியிலிருந்து ஓய்வு அறிவித்திருக்கிறார். ஆனால் அவரது ஓய்வுக்குப் பின்னணியில் சிலர் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. அவர் தனது பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி தாமாகவே விலகியதாக அறிவித்தார். அப்போதே அவர் ஓய்வு பெற்று விட்டாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அப்போது ரோகித் சர்மா தான் ஓய்வு பெறவில்லை என விளக்கமளித்தார்.

மேலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ரோகித் சர்மா, இடையே முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க்குக்கு அளித்த பேட்டி ஒன்றில், தான் அடுத்து நடைபெற உள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்குத் தயாராகி வருவதாகவும், அந்தத் தொடரில் எந்தெந்த வேகப்பந்துவீச்சாளர்களை அழைத்துச் செல்லப் போகிறோம் என ஒரு கேப்டனாகவே பேசியிருந்தார். எனவே அவர்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படப் போகிறார் என அனைவரும் நினைத்தனர்.
மேலும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் ரோகித் சர்மாவுக்கு ஏ பிளஸ் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. ஏ பிளஸ் ஒப்பந்தம் என்பது மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் நட்சத்திர வீரர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். ரோகித் சர்மா டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டாலும், இந்திய அணியின் மூத்த வீரர் என்பதோடு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்ததால், அவருக்கு ஏ பிளஸ் பிரிவு ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருந்தது. இதை வைத்தும் ரோகித் சர்மாவே டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பார் என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால், திடீரென இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பதற்கான முயற்சியை பிசிசிஐ எடுக்கும் முன்பாக, ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இரண்டு வாரங்களில் என்ன மாற்றம் நடந்தது என பலரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் விசாரித்த போது ஒரு குறிப்பிட்ட தகவல் சொல்லப்படுகிறது.
ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க முடியாது என்பதில் பிசிசிஐ உயர் அதிகாரிகள் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் உறுதியாக இருந்துள்ளார். ஏனெனில் ரோகித் சர்மாவால் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முடிவு வரை அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் கேப்டனாக செயல்பட முடியுமா? அதுவரை அவரது பேட்டிங் ஃபார்ம் நன்றாக இருக்குமா? அப்போது அவருக்கு 40 வயதாகி இருக்கும். அந்தச் சூழ்நிலையில் அவரால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியுமா? என்பது போன்ற கேள்விகள் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டி அவருக்கு கேப்டன் பதவியை மறுத்திருக்கின்றனர்.
ஒருவேளை ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்தால், அவரை ஒரு வீரராக மட்டுமே தாங்கள் எடுத்துக் கொள்வோம் எனவும் தேர்வு குழு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. அதற்கு காரணமும் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை போல ரோகித் சர்மா சரியாக விளையாடவில்லை என்றால், அவரை அணியில் இருந்து நீக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்போது அவர் கேப்டனாக இருந்தால், அது அணியில் குழப்பத்தை ஏற்படுத்தும். அதுதான் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களிலும் நடந்தது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
தனக்கு இந்திய டெஸ்ட் அணியில் முக்கியத்துவம் இல்லை என்பதை அறிந்த ரோகித் சர்மா, தாமாகவே ஓய்வு முடிவை அறிவித்துவிட்டார். ஏனெனில், அவரை ஒரு வீரராக தேர்வு செய்தால், நிச்சயமாக ப்ளேயிங் லெவனில் வாய்ப்பளிக்க மாட்டார்கள்.
அணியில் தேர்வு செய்வது மட்டுமே தேர்வு குழுவின் வேலையாக இருக்கும். அதன் பிறகு போட்டியில் வாய்ப்பளிப்பதா? வேண்டாமா? என்ற முடிவை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் எடுப்பார். ஏற்கனவே ரோகித் சர்மாவை டெஸ்ட் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற முடிவில் தான் கௌதம் கம்பீர் இருக்கிறார். எனவே தான், கேப்டன் ஆகவில்லை என்றால், நிச்சயமாக ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்காது, வாட்டர் பாய் வேலை தான் செய்ய வேண்டும் என்பதை ரோகித் சர்மா உணர்ந்தே இருக்கிறார். அதனால் தான் ஓய்வை அறிவித்து விட்டார் என்கிறார்கள்.