டெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்துத் தெரு நாய்களையும் உடனடியாகப் பிடித்து அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அதிகரித்து வரும் நாய் கடி சம்பவங்களைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக டெல்லி மற்றும் கேரளாவில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், இதனால் ரேபிஸ் நோயால் ஏற்படும் இறப்புகளும், நாய் கடி வழக்குகளும் கூடி வருவதாகவும் புகார்கள் எழுந்தன. கொரோனா காலகட்டத்துக்கு பிறகு அனைத்து மாநிலங்களிலும் தெரு நாய் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்தச் சூழலில், டெல்லி-என்சிஆர் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், தெரு நாய்கள் இல்லாத பகுதிகளை உருவாக்க வேண்டும் என்றும், பிடிக்கப்படும் நாய்களை மீண்டும் தெருக்களில் விடக்கூடாது என்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்காக எட்டு வாரங்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரித்திகா சஜ்தே, தெரு நாய்கள் மீதான தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது பதிவில், "அவர்கள் இதை ஒரு தொல்லை என்கிறார்கள், நாங்கள் இதை ஒரு இதயத்துடிப்பு என்கிறோம். இன்று உச்ச நீதிமன்றம் டெல்லி-என்சிஆர்-இல் உள்ள ஒவ்வொரு தெரு நாயையும் தெருக்களில் இருந்து அகற்றி, சூரிய ஒளி, சுதந்திரம் மற்றும் பரிச்சயமான முகங்கள் இல்லாத ஓரிடத்தில் அடைக்கச் சொல்கிறது," என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "இவை வெறும் 'தெரு நாய்கள்' அல்ல. உங்கள் தேநீர்க் கடைக்கு வெளியே ஒரு பிஸ்கட்டுக்காகக் காத்திருப்பவை. கடைக்காரர்களுக்கு அமைதியான இரவு காவலர்கள். பள்ளியிலிருந்து குழந்தைகள் திரும்பும்போது வாலை ஆட்டுபவை. அக்கறையற்ற இந்த நகரத்தில் ஒரு அரவணைப்பைக் கொடுப்பவை," என்று உணர்வுப்பூர்வமாகக் கூறியுள்ளார்.
நாய் கடி மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள் நியாயமானவை என்பதை ஒப்புக்கொண்ட ரித்திகா, ஒட்டுமொத்த விலங்குகளின் சமூகத்தையே கூண்டில் அடைப்பது ஒரு தீர்வு அல்ல, அது ஒரு இனத்தை அழிக்கும் செயல் என்று கூறியுள்ளார்.
இதற்கு உண்மையான தீர்வு, பெரிய அளவிலான கருத்தடை திட்டங்கள், தொடர்ச்சியான தடுப்பூசி முகாம்கள், சமூக உணவளிக்கும் இடங்கள் மற்றும் தத்தெடுப்புப் பிரச்சாரங்கள் ஆகியவைதான் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். "தண்டனை அல்ல, சிறைவாசம் அல்ல. பேச முடியாத உயிரினங்களைப் பாதுகாக்க முடியாத ஒரு சமூகம், தனது ஆன்மாவை இழந்து கொண்டிருக்கிறது. இன்று நாய்களுக்கு இந்த நிலை, நாளை யாருக்கு? அவற்றுக்காக உங்கள் குரலை உயர்த்துங்கள், ஏனென்றால் அவற்றுக்கு குரல் இல்லை," என்று ரித்திகா தனது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரித்திகா சஜ்தேவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் உரிமைகள் ஆகியவற்றுக்கு இடையே எது முக்கியம்? என்ற விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.