ஹாமில்டன்: சச்சின் டெண்டுல்கர், அஜய் ஜடேஜா இணைந்து படைத்த உலக கோப்பை சாதனையை, இன்றைய அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் முறியடித்தனர்.
அயர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில், இந்தியாவின் தொடக்க வீரர்கள், ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடி 174 ரன்கள் குவித்தது. உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவின் தொடக்க விக்கெட் சாதனை ரன் குவிப்பு இதுவாகும்.
1996ம் ஆண்டு உலக கோப்பையின்போது, கென்யாவுக்கு எதிரான போட்டியில், சச்சினுடன் தொடக்க வீரராக களமிறங்கினார் அஜய் ஜடேஜா. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 163 ரன்களை குவித்தது. சச்சின் சதம் அடித்தார், ஜடேஜா 53 ரன்கள் எடுத்தார்.
அதேபோல, இன்றைய போட்டியில், தவான் சதம் அடித்தார், ரோகித் அரைசதம் கடந்தார். ரோகித்திற்கு இது 25வது அரை சதமாக அமைந்தது. தவானுக்கு அது 8வது சதமாகும்.
நடப்பு உலக கோப்பையில், ரோகித்-தவான் ஜோடி எடுத்த 174 ரன்கள்தான், முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் அதிகபட்சமாகும். முன்னதாக ஸ்காட்லாந்துக்கு எதிராக இங்கிலாந்தின் மொயீன் அலி மற்றும் இயான் பெல் ஜோடி 172 ரன்களை எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.