மும்பை: இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, இளம் வீரர் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது, பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ராபின் உத்தப்பா ஆதரித்து பேசி இருக்கிறார். பிசிசிஐயின் இந்த முடிவுக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவின் வயதை சுட்டிக்காட்டி அவர் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தனது யூடியூப் சேனலில் இதுகுறித்து விரிவாகப் பேசிய ராபின் உத்தப்பா, இந்த கேப்டன்சி மாற்றத்தை ஒரு எதிர்கால நோக்கோடு பார்க்க வேண்டும் என்றும். ரோஹித் சர்மாவின் வயது 41 ஆகி விடும் என்றும் குறிப்பிட்டார்.
"உண்மையைச் சொல்லப்போனால், 2027 உலகக் கோப்பை வரும்போது ரோஹித் சர்மாவுக்கு 41 வயதாகிவிடும். அதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பிரஷர் அதிகமாக இருக்கும் நேரத்தில், திடீரென ஒரு கேப்டனை மாற்றுவதை விட, பிரஷர் குறைவாக இருக்கும்போதே இந்த மாற்றத்தைச் செய்வது புத்திசாலித்தனம். இதன்மூலம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சங்கடமான சூழல்களைத் தவிர்க்கலாம்" என்று உத்தப்பா கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா தனது உடற்தகுதியைப் பேணி வந்தால், அவரும் விராட் கோலியும் நிச்சயம் அணியில் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை என்றும் உத்தப்பா நம்பிக்கை தெரிவித்தார். இந்தச் சீரான மாற்றம், சுப்மன் கில் 2027 உலகக் கோப்பைக்கு முன்பாக ஒரு முழுமையான கேப்டனாக உருவாவதற்கு உதவும் என்பதே அவரது வாதமாக உள்ளது.
கேப்டன்சி மாற்றம் ஒருபுறம் இருந்தாலும், ஒரு வீரராக ரோஹித் சர்மாவின் முன் இருக்கும் சவால்களையும் உத்தப்பா சுட்டிக்காட்டினார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ரோஹித் இனி ஒருநாள் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் மட்டுமே விளையாடுவார்.
"அவர் அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாததால், அவரது ஃபார்ம் பெரிய அளவில் சரியும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், ஒரு வீரருக்குத் தேவையான 'ரிஃப்ளெக்ஸ்' (Reflexes) மற்றும் போட்டி அனுபவம் குறைய வாய்ப்புள்ளது. அவர் ஐபிஎல் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார்" என்று உத்தப்பா தனது கவலையை வெளிப்படுத்தினார்.
ராபின் உத்தப்பா போன்றவர்களின் ஆதரவு ஒருபுறம் இருந்தாலும், ரோஹித் சர்மாவின் கேப்டன்சி சாதனைப் பட்டியலைப் பார்த்தால், இந்த முடிவு ஏன் இவ்வளவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது புரியும். 2017-ல் முதன்முறையாக ஒருநாள் கேப்டன் பொறுப்பேற்ற ரோஹித், இந்தியாவை 56 போட்டிகளில் வழிநடத்தி, 42 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். அவரது வெற்றி விகிதம் 75% ஆகும்.
அவரது தலைமையில், இந்திய அணி 2018 மற்றும் 2023 ஆசியக் கோப்பைகளையும், 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது. ரோஹித் சர்மாவின் சாதனை பட்டியல் மிகவும் நீளம் என்றாலும், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு நடைமுறை முடிவாகவே ராபின் உத்தப்பா இதைப் பற்றி கூறி இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்த விவாதம் இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.