மும்பை: இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டது, கிரிக்கெட் உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆனால், இந்த அரசியல் விளையாட்டுகளுக்கெல்லாம் அசராமல், ரோஹித் சர்மா தனது பேட்டால் பதிலடி கொடுக்க, அமைதியாக ஒரு மெகா திட்டத்தைத் தீட்டி, அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். சுப்மன் கில்லிடம் கேப்டன்சி சென்ற நிலையில், தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு தனது ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுக்க அவர் தயாராகி வருகிறார்.
கடந்த மாதம் துபாயில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் திருவிழா நடந்து கொண்டிருந்தபோது, ரோஹித் சர்மா பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA - CoE) தனது பேட்டிங்கிற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
செப்டம்பர் 16-ம் தேதி முதல், கிட்டத்தட்ட ஒரு வாரம் பெங்களூருவில் தங்கியிருந்த ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அந்தப் பயிற்சி, சாதாரணமானதாக இருக்கவில்லை. ஆஸ்திரேலியாவின் ஆடுகளச் சூழல் மற்றும் அங்குள்ள வேகப்பந்து வீச்சாளர்களை மனதில் வைத்து, அவரது வலைப்பயிற்சி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.

குறிப்பாக, உயரமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகப் பந்துவீச வேண்டும் என்று அவரே கேட்டுக்கொண்டு, தினமும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேட்டிங் பயிற்சி செய்துள்ளார். ஒதுக்கப்பட்ட பயிற்சி நேரம் முடிந்த பிறகும், ஊழியர்கள் சொல்லியும் கேட்காமல், தனது பயிற்சியை நீட்டித்துள்ளார். இதற்காக, 10 பந்துவீச்சாளர்கள் மற்றும் த்ரோ-டவுன் ஸ்பெஷலிஸ்ட்கள் பயன்படுத்தப்பட்டனர்.
ரோஹித்திற்கு காத்திருக்கும் சவால்!
2022-க்குப் பிறகு, முதன்முறையாக ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே ரோஹித் சர்மா களமிறங்கப் போகிறார் என்பதுதான் இங்கே முக்கியமானது. கேப்டன்சி மாற்றம் குறித்த முடிவை ரோஹித்திடம் "சிறிது காலத்திற்கு முன்பே" தெரிவித்துவிட்டதாக அகர்கர் கூறியுள்ளார். ஒருவேளை, கடந்த மாதமே அவருக்கு இது தெரிந்திருந்தால், பெங்களூருவில் அவர் மேற்கொண்ட அந்தத் தீவிரப் பயிற்சி, இந்த மாற்றத்திற்கான ஒரு நேரடி பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.
2027 உலகக் கோப்பைக்கான திட்டங்களில் ரோஹித் இல்லை என்றும், 2027 வரை அவரால் தனது ஃபார்மைத் தக்கவைக்க முடியுமா என்பதில் அகர்கர் மற்றும் கம்பீருக்குச் சந்தேகம் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ரோஹித் சர்மாவின் இந்தத் தீவிரப் பயிற்சி, இந்தச் சந்தேகங்களுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் ஒரு முயற்சி தான் எனவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது. பெங்களூருவில் நடந்த அந்தப் பயிற்சியை வைத்துப் பார்த்தால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அவ்வளவு எளிதில் களத்தை விட்டு வெளியேறத் தயாராக இல்லை என்பது மட்டும் உறுதி.