மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இணை நாடு திரும்ப உள்ளது. இதனால் மீண்டும் இந்த இரு வீரர்களின் ஆட்டத்தையும் எப்போது பார்க்க முடியும் என்று ரசிகர்கள் தேடி வருகின்றனர். அதுதொடர்பாக முழு விவரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி ஹர்சித் ராணாவின் பவிலிங்கில் சிக்கி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து ரோகித் சர்மா - கோலியின் அதிரடியால் வாகை சூடியது.

38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 125 பந்துகளில் 121 ரன்களும், விராட் கோலி 74 ரன்களும் சேர்த்தனர். இருவரும் 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பழைய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேபோல் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருடன் இரு ஜாம்பவான் வீரர்களும் ஓய்வை அறிவிப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில், இருவரும் தங்களின் பேட்டிங் ஃபார்மையும், ஃபிட்னஸையும் நிரூபித்து காட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா தொடரில் சொதப்பினால், இரு வீரர்களுக்கும் செக் வைக்கலாம் என்று காத்திருந்த கம்பீர் - அகர்கர் கூட்டணிக்கு, பதிலடி கொடுத்துள்ளனர்.
இதனால் 2027 உலகக்கோப்பை தொடருக்கான கனவையும் விராட் கோலி - ரோகித் சர்மா கூட்டணி அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருடன் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் நாடு திரும்புகின்றனர். இதன்பின் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.
ஏற்கனவே டி20 தொடருக்கான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அடுத்ததாக எப்போது ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணியை இந்திய அணிக்காக ஆடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அதன்பின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. நவம்பர் 30 முதல் டிசம்பர் 6 வரை நடக்கும் ஒருநாள் தொடர் ராஞ்சி, ராய்பூர் மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய மைதானங்களில் நடக்க உள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.