சிட்னி: 16 ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இருந்தாலும், ஒவ்வொரு முறையும் பேட்டிங் செய்ய வரும் போது பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பது தான் கிரிக்கெட்டின் சுவாரஸ்யம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் ரன்கள் சேர்ப்பது எப்படி என்று தடுமாறு கற்றுக் கொள்வதாக கூறிய அவர், தற்போதைய சூழலில் ரோகித் சர்மாவும் நானும் தான் அனுபவ வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட்டின் இரு பெரும் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் கடைசி வரை களத்தில் நின்று வெற்றிபெற வைத்துள்ளனர். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 121 ரன்களும், விராட் கோலி 74 ரன்களும் எடுத்து அசத்தினர்.

இதனால் இந்திய அணி ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர். ஏனென்றால் ஐபிஎல் தொடருக்கு பின் இரு வீரர்களும் இந்த ஒருநாள் தொடருக்கு தான் இந்திய அணிக்கு திரும்பினர். இதனால் இருவரும் சேர்ந்து பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் கனவாக இருந்தது. அதற்கேற்ப சேர்ந்து 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.
இந்த வெற்றிக்கு பின் விராட் கோலி பேசுகையில், எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் ஒருவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது பூஜ்ஜியத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். அதுதான் இந்த விளையாட்டின் ஸ்பெஷல். இன்னும் சில நாட்களில் எனக்கு 37 வயதாக போகிறது. ஆனால் இந்த விளையாட்டு சுவாரஸ்யமாக இருக்க அதுதான் காரணம்.
சேஸிங் செய்யும் போதெல்லாம் என்னுடைய சிறந்த பேட்டிங் வெளிப்படுகிறது. ரோகித் சர்மாவுடன் இணைந்து பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 2013ல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு தொடரில் நாங்கள் இணைந்து ஆடினோம். அப்போது இருநந்தே நாங்கள் களத்தில் இருந்தால், எவ்வளவு பெரிய இலக்கையும் எட்ட முடியும் என்று நம்பினோம்.
20 ஓவர்கள் இணைந்து விளையாடினால், ஆட்டத்தில் எங்களின் கைகள் ஓங்கிவிடும் என்று நம்ப தொடங்கினோம். போட்டியின் சூழலையும் நாங்கள் நன்றாக அறிவோம்.. நாங்கள் என்ன செய்துள்ளோம் என்பதும் நன்றாக தெரியும்.. தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் நாங்கள் இருவரும் தான் இப்போது அதிக அனுபவம் கொண்ட பேட்ஸ்மேன்கள் என்று நினைக்கிறேன்.
ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடுவது எப்போதும் பிடித்தமான ஒன்று. நாங்கள் இங்கு ஏராளமான முறை சிறந்த கிரிக்கெட்டை ஆடி இருக்கிறோம். எங்களுக்கு அதிகளவில் ஆதரவு கிடைத்தது. இவ்வளவு பேரும் நேரில் வந்து ஆதரவு அளித்ததற்கு நன்றி.. ஆஸ்திரேலிய ரசிகர்களின் வரவேற்புக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.