சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி 56 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 75வது அரைசதம் இதுவாகும். கடந்த 2 போட்டிகளாக விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்த நிலையில், கடைசி போட்டியில் அசத்தலாக ஆடி அரைசதத்தை எட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரில் இந்திய ஜாம்பவான் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. இதில் 2வது ஒருநாள் போட்டியிலேயே ரோகித் சர்மா அரைசதம் அடித்து ஃபார்முக்கு வந்த நிலையில், விராட் கோலி 2 போட்டிகளிலும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

17 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் விராட் கோலி அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட்டாகி வெளியேறியது இதுவே முதல்முறையாகும். இதனால் கடைசி ஒருநாள் போட்டியில் விராட் கோலி கம்பேக் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய தொடங்கினர். அதற்கேற்ப 3வது போட்டியின் ஃபீல்டிங்கின் போதே விராட் கோலி உற்சாகமாக காணப்பட்டார்.
ஃபீல்டிங்கில் 3 கேட்ச்கள அசத்தலாக பிடிக்க, பேட்டிங் செய்ய விராட் கோலி களமிறங்கிய போது ஒட்டுமொத்த சிட்னி மைதானமும் எழுந்து நின்று மரியாதை கொடுத்தது. தொடர்ந்து முதல் ரன்னை விராட் கோலி எடுத்த போது கரகோஷம் விண்ணைப் பிளக்க, விராட் கோலியும் உற்சாகம் அடைந்தார். தொடர்ந்து விராட் கோலி எந்த அவசரமும் காட்டாமல் ரன்களை எடுத்துக் கொண்டே இருந்தார்.
பவுண்டரிகளில் பெரிதாக கவனம் செலுத்தாத விராட் கோலி, ஒவ்வொரு ரன்னையும் ஓடி ஓடியே எடுத்தார். இதனிடையே எல்லீஸ் வீசிய பந்தில் நடுவரின் முடிவால் விராட் கோலி விக்கெட் ஆவதில் இருந்து தப்பிக்க, அதிர்ஷ்டம் விராட் கோலிக்கு அருகிலேயே இருப்பதாக பார்க்கப்பட்டது. அதனை பயன்படுத்திக் கொண்ட விராட் கோலி, 56 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 75வது அரைசதம் இதுவாகும். அதேபோல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டின் சேஸிங்கின் போது விராட் கோலி அடிக்கும் 70வதாவது அரைசதமாக இது அமைந்துள்ளது. இதனால் விராட் கோலி கம்பேக் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.