தர்மசாலா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வாழ்வா சாவா ஆட்டத்தில் களமிறங்கியுள்ள பஞ்சாப் அணிக்கு 214 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஆட்டத்தின் முதல் 3 ஓவர்களில் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனதால், வார்னர் மற்றும் பிரித்வி ஷா பொறுமையாக விளையாடினர். ஆனால், அதன் பிறகு பஞ்சாப் அணி பந்துவீச்சை டெல்லி சிதறடித்தனர்.

இந்த சீசன் முழுவதும் சொதப்பிய பிரித்வி ஷா, இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 38 பந்துகளில் பிரித்வி ஷா 54 ரன்களை விளாசினார். கேப்டன் வார்னர் 2 சிக்சர், 5பவுண்டரிகளை அடித்து 31 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 94 ரன்களை சேர்த்தது.
இதனையடுத்து களத்திற்கு வந்த ரூசோவ், தன்னுடைய வழக்கமான அதிரடியை காட்டினார். 25 பந்துகளில் அரைசதத்தை கடந்த ரூசோவ் 37 பந்தில் 82 ரன்களை குவித்தார். இதில் 6 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும அடங்கும். பஞ்சாப் அணியில் சாம் கரண், ரபாடா ஆகியோருக்கு ஓவர் பாக்கி இருந்தது.

ஆனால் ஷிகர் தவான் கடைசி ஓவரை சுழற்பந்துவீச்சாளருக்கு கொடுக்க, அந்த ஓவரில் டெல்லி அணி 23 ரன்களை விளாசி அசத்தினர். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது.