குவிந்த ரன்கள்
ஆரம்பம் முதலே தமது மட்டையை சுழற்றினார். பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் பந்துகள் பறந்தன. ஸ்கோர்போர்டிலும் ரன்கள் குவிந்தன. அவருக்கு துணையாக வந்த தொடக்க வீரர் ராகுல் குறைந்த ரன்களுடன் திருப்தி அடைந்து வெளியேறினார்.
எளிதாக 100 ரன்கள்
கெயிலின் காட்டடியில் 12வது ஓவரில் பஞ்சாப் 100 ரன்களை கடந்தது. கெயிலுடன் இருந்த மயங்க் அகர்வால் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தாலும் கெயில் தமது ருத்ரதாண்டவத்தை நிறுத்தவில்லை.
பஞ்சாப் 173 ரன்கள்
சதம் அடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க... இறுதி வரை ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 173 ரன்களை எடுத்தது. கொஞ்சம் கடினமான இலக்கு.. இதுவரை வெற்றி என்பதே இல்லை என்பதால்... ஏக நெருக்கடிக்கு இடையில் பெங்களூரு அணி தமது ஆட்டத்தை தொடர்ந்தது.
19 ரன்கள் படேல்
தொடக்க வீரர்களாக படேலும், கேப்டன் கோலியும் வந்தனர். 19 ரன்களில் வெளியேறினார் படேல். 2வது விக்கெட்டுக்கு கோலியுடன் இணைந்தவர் டி வில்லியர்ஸ். இருவரும் ஒரு முடிவோடு வந்திருந்தனர் என்பது அவர்களின் ஆட்டத்திலேயே தெரிந்தது.
தொடங்கியது ரன் வேட்டை
பரபரவென்று ரன்களை குவித்த கோலி.. வெகு விரைவாக அரைசதம் கடந்தார். டி வில்லியர்சும் விட வில்லை. அவரும் தமது ரன்வேட்டையை தொடங்கினார். ஒரு ஓவருக்கு 10 ரன்கள் என்ற வேகத்தில் 12 ஓவர்களிலேயே பெங்களூரு அணி 100 ரன்களை கடந்தது. அதுவரை அந்த அணி ஒரு சிக்சரை கூட அடிக்கவில்லை. 16வது ஓவரில் முகமது சமி ஒரு பிரேக்கிங் கொடுக்க 67 ரன்கள் குவித்திருந்த கோலி வீழ்ந்தார்.
கவலையில் ரசிகர்கள்
அதுவரை பெங்களூரு அணியிடம் இருந்த ஆட்டம் பஞ்சாப் பக்கம் திரும்பியது. மறுபடியும் தோல்விதானா என்று ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர் என்பது தெரிந்தது. டி வில்லியர்சுடன், ஸ்டோய்னிசும் விக்கெட்டுகளை காப்பாற்றிக் கொண்டும்.. ரன்களையும் சேர்த்த வண்ணம் இருந்தார்.
திருப்புமுனை ஓவர்
ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 48 ரன்கள் தேவை என்ற நெருக்கடி இருந்தது. ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது அந்த 18வது ஓவர் தான்.. அந்த ஓவரில் பெங்களூரு அணிக்கு 18 ரன்கள் கிடைத்தது. இன்னும் 2 ஓவர்களில் 20 ரன்கள் வேண்டும். 19வது ஓவரில் பெங்களூரு அணி 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடிக்க.. ஆட்டத்தின் முடிவு ஒருவழியாக தெரிந்தது.
பெங்களூரு வெற்றி
பெங்களூரு ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற போது ஒரு பவுண்டரியும், 2 ரன்களும் எடுத்து முதல் வெற்றியை பெற்றது பெங்களூரு. 6 தொடர் தோல்விகளுக்கு பிறகு.. பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வென்றது. புள்ளிகளையும் பெற்றது. ஆட்ட நாயகனாக டி வில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.