கவுகாத்தி: டெல்லி பந்துவீச்சாளர் கலீல் அஹ்மத் வீசிய முதல் ஓவரில் 5 பவுண்டரிகளை விளாசி இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வ்வால் மிரட்டலான தொடக்கத்தை கொடுத்துள்ளார். முதல் ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசிய பிரித்வி ஷா மற்றும் கில்கிறிஸ்ட் ஆகியோருக்கு பின், முதல் ஓவரில் 5 பவுண்டரிகளை விளாசிய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
16வது சீசனுக்கு 11வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் திருமணத்திற்காக சொந்த ஊர் திரும்பியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரோவ்மன் பவல் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் தொடக்க வீரர் பிரித்வி ஷா நீக்கப்பட்டு, மனீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் சொதப்பிய சர்ஃபராஸ் கான் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் லலித் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் அணியில் பட்லர் காயம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரும் - ஜெய்ஸ்வாலும் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து டெல்லி அணி தரப்பில் முதல் ஓவரை இடதுகை வேகப்பந்துவீச்சாளரான கலீல் அஹ்மத் வீசினார். இதில் கலீல் அஹ்மத் வீசிய 4வது பந்தை தவிர்த்து மீதமுள்ள ஐந்து பந்துகளிலும் பவுண்டரிகளை விளாசினார். லாங் ஆன், தேர்ட் மேன், லெக் சைட், ஆஃப் சைட் என்று அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளை ஜெய்ஸ்வால் விளாசினார்.
இதனால் முதல் ஓவரிலேயே ராஜஸ்தான் அணி 20 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் ஆட்டத்தின் முதல் ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசிய பிரித்வி ஷா, கில்கிறிஸ்ட் ஆகியோருக்கு பின் ஐந்து பவுண்டரிகளை விளாசிய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். 5 பவுண்டரிகள் விளாசப்பட்டதை நம்ப முடியாமல் வழக்கம் போல் கலீல் அஹ்மத் சிரித்துக் கொண்டே ஃபீல்டிங் செய்ய சென்றார்.
இதனைத் தொடர்ந்து 2வது ஓவரை புயல் வேகப்பந்துவீச்சாளர் நார்கியே வீசினார். அந்த ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான பட்லர், மூன்று பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதன் மூலம் முதல் 12 பந்துகளில் ராஜஸ்தான் அணி 8 பவுண்டரிகளை விளாசி 32 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. இதனால் ராஜஸ்தான் அணி மிகப்பெரிய இலக்கை எட்டும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.