கவுகாத்தி: ராஜஸ்தான் அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் அதிரடியால் டெல்லி பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து நின்றனர்.
16வது சீசனுக்கு 11வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். அதேபோல் டெல்லி அணியில் பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ் மற்றும் சர்ஃபராஸ் கான் நீக்கப்பட்டு அனுபவ வீரர் மனீஷ் பாண்டே, லலித் யாதவ் மற்றும் அதிரடி வீரர் ரோவ்மன் பவல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி தரப்பில் பட்லர் - ஜெய்ஸ்வாக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

டெல்லி அணி தரப்பில் முதல் ஓவரை இடதுகை வேகப்பந்துவீச்சாளரான கலீல் அஹ்மத் பந்துவீச்சில் ஐந்து பவுண்டரிகளை விளாசி ஜெய்ஸ்வால் அதிரடியாக தொடங்கினார். பின்னர் 2வது ஓவரை வீசிய நார்கியே பந்துவீச்சில் பட்லர் 3 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். தொடர்ந்து இந்த கூட்டணி பவுண்டரிகளை விளாசி அசத்தியது. ஒவ்வொரு ஓவரிலும் ஒரு ரன் எடுப்பதற்கு பதிலாக, ஒரு பவுண்டரியை விளாசியதால், ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
தொடர்ந்து டெல்லி அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் விளாசி தள்ளிய ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் அடிக்கும் 5வது அரைசதம் இதுவாகும். இறுதியாக 31 பந்துகளில் ஜெய்ஸ்வால் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள், ஒரு சிக்சரும் அடங்கும். இவர் ஆட்டமிழந்த போது ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 9 ஓவர்கள் முடிவில் 98 ரன்களாக இருந்தது. இதனால் பெரிய இலக்கை ராஜஸ்தான் அணி எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால், 2 அரைசதங்களை விளாசி அசத்தியுள்ளார். ஏற்கனவே சையத் முஷ்டாக் அலி, இராணி கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் சிறந்த ஃபார்மை வெளிப்படுத்தி ரன்களை குவித்த ஜெய்ஸ்வால், அதே ஃபார்மை ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து வருகிறார். இதனால் விரைவில் ஜெய்ஸ்வாலுக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.