ஜெய்ப்பூர் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, திடீரென களமிறங்கிய அஸ்வின் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசியுள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ராஜஸ்தான் அணி தரப்பில் பட்லர் - ஜெய்ஸ்வால் கூட்டணி களமிறங்கியது. டெல்லி அணி தரப்பில் முதல் ஓவரை கலீல் அஹ்மத் வீசினார். முதல் ஓவரில் 4 ரன்கள் மட்டும் சேர்க்கப்பட்ட நிலையில், 2வது ஓவரிலேயே நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வால் 5 ரன்களில் போல்டாகி வெளியேறினார்.

தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன், முகேஷ் குமார் வீசிய 4வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அசத்தினார். ஆனால் கலீல் அஹ்மத் வீசிய ஓவரில் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, மறுபக்கம் பட்லர் தனது ஃபார்மை மீட்டெடுக்க போராடி வந்தார். குறிப்பாக குல்தீப் யாதவ் பவுலிங்கை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் க்ரீஸில் கரகாட்டமே ஆடினார். அவரும் 16 பந்துகளில் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ராஜஸ்தான் அணி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் ராஜஸ்தான் அணி திடீரென அஸ்வினை பேட்டிங் செய்ய அனுப்பியது. ஏற்கனவே 2022ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி தடுமாறிய போது இதேபோல் அஸ்வின் களமிறக்கப்பட்டார். அப்போது சிறப்பாக விளையாடிய அஸ்வின், அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் மீண்டும் அஸ்வின் தனது மேஜிக்கை நிகழ்த்துவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இந்த நிலையில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் சிக்சர் அடித்து ஆச்சரியம் கொடுக்க, அதன்பின் அஸ்வினை வீழ்த்துவதற்காக உடனடியாக நார்கியே அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். ஆனால் அஸ்வினுக்கு யார்க்கர் பந்துகளை வீசாமல் அவர் ஷார்ட் பால்களை வீச, அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி அசத்தினார் அஸ்வின். இதனால் ராஜஸ்தான் அணி தரமான கம்பேக் கொடுத்தது. சிறப்பாக விளையாடிய அஸ்வின் 19 பந்துகளில் 3 சிக்ஸ் உட்பட 29 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு அஸ்வின் - பராக் கூட்டணி இணைந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.