ஜெய்ப்பூர்: மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மாவை வணங்கி, அவரிடம் தனது ஜெர்சியில் ஆகாஷ் மத்வால் கையெழுத்து பெற்ற சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகாவை பார்த்தும் வணக்கம் கூறியது மும்பை ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி 36 பந்துகளில் 53 ரன்களை விளாசி தள்ளினார். இந்த சீசனில் ரோஹித் சர்மா அடிக்கும் 3வது அரைசதம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள ரோஹித் சர்மா, இதுவரை 9 இன்னிங்ஸில் விளையாடி 293 ரன்களை விளாசி இருக்கிறார்.
அதேபோல் இளம் வீரர்களை எளிதாக வழிநடத்துவதோடு, ஓய்வறையில் இருந்தவாறும் ஹர்திக் பாண்டியாவுக்கு உதவியாக இருக்கிறார். இதனால் மும்பை அணி தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்றுள்ளது. இதனிடையே ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்ற பின், ரோஹித் சர்மாவை ராஜஸ்தான் அணி வீரர் ஆகாஷ் மத்வால் வணங்கி சில நிமிடங்கள் உரையாற்றினார்.
ஆகாஷ் மத்வால் மும்பை அணிக்காக ரோஹித் சர்மாவின் தலைமையில் அறிமுகமானவர். இதனால் ரோஹித் சர்மாவுக்கு எப்போதும் விஸ்வாசமாக இருக்கும் ஆகாஷ் மத்வால், தனது ராஜஸ்தான் அணியின் ஜெர்சியிலும் ஆட்டோகிராஃப் பெற்று கொண்டார். அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகாவையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த வீடியோ மும்பை அணி ரசிகர்கள் மற்றும் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அதேபோல் ரோஹித் சர்மா மும்பை அணியின் கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்டாலும், ரோஹித் சர்மா எங்கிருந்தாலும் அரசன் தான் என்று கொண்டாடி வருகிறார்கள்.