ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. பவர் பிளே ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணி இழந்து தடுமாறியது. இந்த வெற்றியின் மூலமாக மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை விளாசியது. சிறப்பாக ஆடிய ரிக்கல்டன் 38 பந்துகளில் 61 ரன்களையும், ரோஹித் சர்மா 36 பந்துகளில் 53 ரன்களையும் விளாசினர்.

இதன்பின் ராஜஸ்தான் அணி தரப்பில் வைபவ் சூர்யவன்ஷி - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் தீபக் சஹர் வீசிய முதல் ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷி டக் அவுட்டாகி வெளியேற, 2வது ஓவரை வீச போல்ட் வந்தார். அந்த ஓவரில் 2 சிக்சர்களை விளாசினாலும், கடைசி பந்தில் ஜெய்ஸ்வாலை 13 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார்.
இதன்பின் மீண்டும் 4வது ஓவரில் நிதிஷ் ராணா 9 ரன்களில் ஆட்டமிழக்க, 5வது ஓவரை வீசுவதற்கு பும்ரா அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் ரியான் பராக் 16 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஹெட்மயர் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். ஹெட்மயருக்கு ஷார்ட் லெக் ஃபீல்டர் வைத்து பும்ரா வீசியது ஆச்சரியத்தை கொடுத்தது.
அந்த விக்கெட் வீழ்த்தப்பட்ட பின், ஓய்வறையில் இருந்த மலிங்கா உடனடியாக ஜெயவர்தனேவை பார்த்து கொண்டாடினார். இதன் மூலமாக ராஜஸ்தான் அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் மும்பை அணி பிரத்யேக திட்டத்துடன் களமிறங்கியது தெரிய வந்தது. தொடர்ந்து வந்த சுபம் துபே 15 ரன்களிலும், துருவ் ஜுரெல் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் சென்றனர்.
இதனால் ராஜஸ்தான் அணி 76 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் கரண் சர்மா பவுலிங்கில் தீக்சனா மற்றும் கார்த்திகேயே ஆகியோர் தலா 2 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் ஆர்ச்சர் சில சிக்சர்களை விளாசினார். பின் ஆர்ச்சரும் 30 ரன்களில் ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதன் மூலமாக ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. அதேபோல் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்றுள்ள மும்பை அணி புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதனால் மும்பை அணியின் வெற்றியை எந்த தடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.