ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை குவித்துள்ளது. கடைசி 2 ஓவர்களில் மட்டும் மும்பை அணி 71 ரன்களை விளாசியது. இதுவரை மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் குவித்து ஒருமுறை கூட தோல்வியடைந்ததில்லை என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் மும்பை அணி தரப்பில் ரோஹித் சர்மா - ரிக்கல்டன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சர் முதல் ஓவரை வீசினார்.

முதல் 3 ஓவர்கள் மும்பை அணி பேட்ஸ்மேன்கள் நிதானம் காத்த நிலையில், 4வது ஓவர் முதல் அதிரடியை தொடங்கினர். இதனிடையே ரோஹித் சர்மா எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டும், டிஆர்எஸ் மூலமாக தப்பித்தார். இதன்பின் ரிக்கல்டன் பவுண்டரியும், சிக்சருமாய் அடிக்க, 6 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 58 ரன்களை குவித்தது.
இதன்பின் பவுலிங் செய்ய வந்த அத்தனை பவுலர்களின் ஓவர்களில் குறைந்தது 2 பவுண்டரிகள் விளாசப்பட்டன. இதனால் ரிக்கல்டன் 29 பந்துகளில் அரைசதம் அடிக்க, 10 ஓவர்களில் மும்பை அணியின் ஸ்கோர் 99 ரன்களாக உயர்ந்தன. தொடர்ந்து 12வது ஓவரில் ரோஹித் சர்மாவும் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ரிக்கல்டன் 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து ரோஹித் சர்மா 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து வெளியேற, சூர்யகுமார் யாதவ் - ஹர்திக் பாண்டியா கூட்டணி இணைந்தது. இருவருமே அதிரடியை அடுத்த கியருக்கு கொண்டு சென்ற நிலையில், 15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 146 ரன்களை எடுத்திருந்தது. இதன்பின் ஃபரூக்கி வீசிய 18வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 21 ரன்கள் சேர்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் கொடுத்த கேட்சை கார்த்திகேயா கோட்டைவிட்டார். இதன்பின் கடைசி ஓவரை வீச ஆகாஷ் மத்வால் வந்தார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 13 ரன்கள் சேர்க்கப்பட, மும்பை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை குவித்துள்ளது.
ஹர்திக் மற்றும் சூர்யா இருவரும் 23 பந்துகளில் 48 ரன்களை சேர்த்து அசத்தினர். இதுவரை மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் குவித்து ஒருமுறை தோல்வியை சந்தித்ததில்லை. அந்த சாதனை முறியடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் விரைவாக விக்கெட்டை கைப்பற்றவில்லை என்றால், மும்பை அணிக்கு அதிர்ச்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.