அல் அமீரட் : கத்தார் அணிக்கு எதிரான போட்டியில் நேபாளம் வீரர் திபேந்திரா சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸ் அடித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸ் அடிப்பது அவ்வளவு சாதாரணம் கிடையாது. டி20 கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் தாக்குதல் உச்சத்தில் இருந்தாலும், ஒரே ஓவரில் 6 சிக்ஸ் இதுவரை 2 பேர் மட்டும் அடித்துள்ளனர். 2007 டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் பிராட் பவுலிங்கில் இந்திய அணியின் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸ் அடித்து சாதனை படைத்தார்.

இதன்பின் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்ஸ் அடித்து சாதனை படைத்தார். ஆனால் இந்த ஓவரில் இலங்கை அணி ஸ்பின்னர் ஒரு நோ-பாலை வீசியதால், பொல்லார்ட் இந்த சாதனையை படைக்க முடிந்தது. இந்த நிலையில் ஏசிசி பிரீமியர் கோப்பை தொடரில் மீண்டும் இந்த சாதனை அரங்கேறியுள்ளது.
இதில் கத்தார் அணியை எதிர்த்து நேபாளம் அணி களமிறங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய நேபாளம் அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் கடைசி ஓவரை வீச கத்தார் அணியின் கம்ரான் கான் அழைக்கப்பட்டார். இந்த ஓவரை நேபாள அணியின் திபேந்திரா சிங் எதிர் கொண்டார்.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே அபாரமாக சிக்ஸ் அடிக்க, 2வது பந்தில் டீப் பாய்ண்ட் திசையில் வேற லெவல் சிக்ஸ் பறந்தது. தொடர்ந்து 3வது பந்தில் மிட் விக்கெட் திசையிலும், 4வது பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் மூலமாகவும் சிக்ஸ் விளாசப்பட்டது. 5வது பந்தில் அடிக்கப்பட்ட சிக்சர் அருகில் இருந்த பயிற்சி மைதானத்தில் சென்று விழுந்தது. இதனால் 6வது பந்திலும் சிக்ஸ் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
மீண்டும் 6வது பந்திலும் சிக்சர் அடிக்கப்பட்ட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதன் மூலமாக நேபாளம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய திபேந்திரா சிங் 21 பந்துகளில் 7 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 64 ரன்களை விளாசினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 6 பந்துகளில் 6 சிக்ஸ் அடித்த 3வது வீரர் என்ற சாதனையை திபேந்திரா சிங் படைத்துள்ளார். இதனால் இந்திய ரசிகர்கள் அவரை ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் செய்வதை பற்றி அணிகள் சிந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.