மும்பை : இந்த செய்தியை நம்புவதா? வேண்டாமா? என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது. அப்படி என்ன செய்தி என்றால், பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை விற்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
ஸ்டார் தொலைக்காட்சி குழுமம் தான் ஹாட்ஸ்டார் என்ற ஓடிடி தளத்தை இந்தியாவில் தொடங்கியது. பின்னர் டிஸ்னி நிறுவனம் அதில் முதலீடு செய்யவே அது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தியாவில் ஆறு ஆண்டுகளாக 2022 வரை ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் - ஹாட்ஸ்டார் தன் வசம் வைத்திருந்தது. ஆனால், 2023 ஐபிஎல் தொடரை டிஜிட்டலில் ஒளிபரப்பும் உரிமையை அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து பிசிசிஐ நடத்தும் இந்திய அணியின் கிரிக்கெட் தொடர்களை தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டலில் ஒளிபரப்பும் உரிமையையும் ரிலையன்ஸ் ஜியோ கைப்பற்றியது.
ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டி போட முடியாத ஸ்டார் ஸ்போர்ட்ஸ் - டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தற்போது பெரும் சிக்கலில் உள்ளது. முக்கிய கிரிக்கெட் தொடர்களை ஒளிபரப்பும் உரிமை இல்லை என்றால் விளம்பர வருவாய் மற்றும் ஹாட்ஸ்டார் சந்தா வருவாய் என அனைத்தும் பல மடங்கி இறங்கிவிடும்.
ஏற்கனவே. 2023 ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமையை இழந்த ஹாட்ஸ்டார், அதன் காரணமாக 2 கோடி சந்தாதாரர்களை இழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படியே போனால் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்பதால் ஹாட்ஸ்டார் தளத்தை சரியான நபரிடம் விற்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது ஐபிஎல் தொலைக்காட்சி உரிமம், ஐசிசி தொடர்கள் உரிமம், ஆஸ்திரேலியா கிரிக்கெட் உரிமம் (இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமை), ஆசிய கோப்பை கிரிக்கெட், பிரீமியர் லீக், புரோ கபடி லீக், விம்பிள்டன் ஆகியவற்றின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் ஆகியவை ஸ்டார் குழுமத்திடம் உள்ளன.
இந்த நிலையில், ஹாட்ஸ்டார் தளத்தை மட்டும் விற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் யாருமே எதிர்பார்க்காத திருப்பமாக யாரால் தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டதோ அந்த நிறுவனத்திடமே விற்க முயற்சிகள் நடந்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. ஆம், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இரு நிறுவனங்களும் இந்த செய்தி குறித்து பேச மறுத்துவிட்டன.
மறுபுறம் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரை 2 கோடி பேர் ஹாட்ஸ்டாரில் பார்த்ததாகவும், அடுத்து நடக்கவுள்ள ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரை இலவசமாக மொபைலில் ஒளிபரப்ப திட்டம் உள்ளதாகவும், அதில் அதிக விளம்பர வருவாய் மற்றும் பார்வையாளர்கள் கிடைக்கும் பட்சத்தில் விற்பனை முடிவை கைவிடலாம் எனவும் கூறப்படுகிறது.