அசீம் காஸி
தற்போது சிஎஸ்கே ரசிகர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் இன்னொரு செய்தி வெளியாகியுள்ளது. ருதுராஜ் கெயிக்வாட்டின் செயல்பாடுகள் அனைத்தும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனியை போலவே இருப்பதாக மகாராஷ்டிரா அணியின் முக்கிய வீரர் அசீம் காஸி தெரிவித்துள்ளார்.
தோனி - ருதுராஜ்
விஜய் ஹசாரே டிராபி தொடரில் மகாராஷ்டிரா அணி ராஞ்சியில் சில போட்டிகளில் விளையாடியது. ராஞ்சியில் மகாராஷ்டிரா அணி விளையாடிய போது, தோனி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இது மகாராஷ்டிரா அணி வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து மகாராஷ்டிரா அணியின் அசீம் காஸி கூறுகையில், ராஞ்சியில் விளையாடிய போது தோனியை சந்திக்க முடிந்தது. அவர் எங்களுடன் பேசியபோது ருதுராஜ் கெயிக்வாட்டின் செயல்பாடுகளோடு ஒற்றுமை இருந்தது.
ருதுராஜ் கேப்டன்சி
கிட்டத்தட்ட தோனி பேசியது ருதுராஜ் கெயிக்வாட் பேசி இருந்ததை ஒத்து இருந்தது. அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதால் கூட ஏற்பட்ட பாதிப்பாக இருக்கும். அதேபோல் தோனி தனது அணியை எப்படி கையாள்வார் என்பதை படித்து, கேட்டு அறிந்துள்ளோம். தற்போது ருதுராஜ் கெயிக்வாட்டின் வழிநடத்தலும் தோனியை போலவே இருக்கிறது என்று தெரிவித்தார்.
சென்னை கேப்டன்
எதிர்காலத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாட் உருவெடுப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜடேஜா கேப்டன்சியில் இருந்து விலகியதால், வரும் ஐபிஎல் தொடரில் தோனி கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே தோனிக்கு கடைசி சீசன் என்பதால், இளம் வீரரான ருதுராஜ் கெயிக்வாட் சிஎஸ்கே அணியின் கேப்டனாக அறிவிக்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது.