டோமினிக்கா: டி20 கிரிக்கெட்டை போல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறந்த வீரராக வருவதற்கான திறமை ருதுராஜ் கெய்க்வாட்-டிடம் உள்ளதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 590 ரன்களை விளாசினார். இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான மாற்று வீரராக அறிவிக்கப்பட்டார். ஆனால் திருமணம் காரணமாக அவர் விலகியதால், அந்த வாய்ப்பு யஷஸ்வி ஜெய்ஷ்வாலுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுவார் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக 3வது இடத்தில் சுப்மன் கில் விளையாடுவார் என்று தெரிய வந்துள்ளது. இதனால் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இன்னும் சில மாதங்களில் வாய்ப்புக்காக இந்திய அணி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஐபிஎல் தொடரிலும், டி20 கிரிக்கெட்டிலும் ருதுராஜ் கெய்க்வாடால் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்துவிட்டார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தரமான வீரராக உருவாகுவதற்கான அனைத்து திறமைகளும் அவருக்கு உள்ளது.

இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயம் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படுவார் என்று கூறியுள்ளார். இந்திய அணியில் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் சீனியர் வீரர்களே திணறி வரும் சூழலில், உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஸ்பின்னர்களை அநாயசமாக வெளுத்து வாங்கக் கூடிய வீரர் ருதுராஜ் கெய்க்வாட்.
இதனால் அஜிங்கியா ரஹானேவுக்கான சிறந்த மாற்று வீரராக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் விராட் கோலி ஓய்வுபெற்றால் நிச்சயம் சுப்மன் கில் 4வது இடத்தில் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் அடுத்த சில ஆண்டுகளில் இந்திய அணியின் 3வது இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.