சென்னை: சென்னை அணியின் இளம் தொடக்க வீரர் எம்எஸ் தோனியை போல் மிகுந்த நிதானம் மற்றும் அமைதியான மனநிலையை கொண்டவர் என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்பட்டு வரும் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 590 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். சென்னை அணிக்காக சிறப்பாக ஆடிவரும் இவர், விரைவில் இந்திய அணியின் தொடக்க வீரராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

சென்னை அணியின் அடுத்த கேப்டனுக்கான பந்தயத்தில் ஜடேஜா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் இருக்கிறார்கள். இதில் ஜடேஜா முன்னிலையில் இருந்தாலும், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக கேப்டன்சியை மேற்கொண்டு வருகிறார். மகாராஷ்டிரா அணியின் கேப்டன், மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடரில் கேப்டன் என்று பல்வேறு அனுபவங்களை பெற்று வருகிறார். இதனால் களத்தில் அவரின் செயல்பாடுகள் பலரையும் வியக்க வைத்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார். சுரேஷ் ரெய்னா பேசுகையில், சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அப்படியே எம்எஸ் தோனியை போன்றவர் தான். அவரின் நிதானமும், அமைதியும் தோனியை நினைவுப்படுத்துகிறது என்று பாராட்டியுள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் களத்தில் இருக்கும் போது, அழுத்தத்தை வெளிப்படுத்தியதே இல்லை. இதனால் ருதுராஜ் கெய்க்வாட்டை ரெய்னா தொடர்ந்து பாராட்டி வருகிறார். மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடரில் புனே அணியின் கேப்டனாக ருதுராஜ் சிறப்பாக செயல்பட்டு வருவது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.