மும்பை: ஆசியப் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளது குறித்து இந்திய அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரராக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட், சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் என்ற நிலை வரைக்கும் உயர்ந்துவிட்டார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இந்திய அணியில் போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை. எத்தனையோ முறையும் போராடியும் இந்திய அணியில் வாய்ப்பு இதுவரை பெரியளவில் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், 43 பந்துகளில் 58 ரன்கள் விளாசி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜெய்ஸ்வால், திலக் வர்மா இருவரும் புல் ஷாட் ஆடி ஆட்டமிழந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டம் எப்படி புல் ஷாட் ஆட வேண்டும் என்பது போல் அமைந்தது.
இதுமட்டுமல்லாமல் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாகவும், ஆசியப் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ருதுராஜ் கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேப்டன்சி பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், எம்எஸ் தோனி எப்போதும் ஒரேயொரு ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது என்று சொல்லிக் கொண்டே இருப்பார். ஏனென்றால் எதிர்காலத்தை பற்றி கவலைக் கொள்ளக் கூடாது என்பதற்காக தான்.
எனக்கு சோசியல் மீடியாவை பயன்படுத்தும் பழக்கம் இல்லை. அதேபோல் என்னை பற்றி யார் என்ன கருத்து சொன்னாலும் கவலைப்படப் போவதில்லை. இதுபோன்ற விஷயங்களை சிஎஸ்கே அணியில் இருந்த போதுதான் கற்றுக் கொண்டேன். என்னைப் பொறுத்தவரை தலைமைப் பண்பு என்பது அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கு முழுமையான நம்பிக்கையையும், மன உறுதியையும் அளிப்பது தான்.
வீரர்களின் மனநிலை என்ன, என்ன சிந்திக்கிறார்கள் என்பதை அறிந்து கேப்டன் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அதேபோல் வீரர்களின் திட்டத்தின் மீதும், வீரர்கள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் ஏற்கனவே மகராஷ்டிரா அணியை வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.