மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர்களில் சிலர் இன்றே ஜமைக்கா புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய வீரர்களுக்கு ஒரு மாதம் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான வீரர்கள் வெளிநாடுகளுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளனர். ஆனால் இளம் வீரர்கள் பலரும் சொந்த ஊரில் பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். அதேபோல் இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டோர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அரிவிக்கப்பட்டது. அதில் புஜாரா, உமேஷ் யாதவ், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல் முகமது ஷமிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நவ்தீன் சைனி, முகேஷ் குமார், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் சிலர் முன்னதாக ஜமைக்கா புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஷ்வால், கேஎஸ் பரத், சைனி உள்ளிட்ட வீரர் ரஹானே தலைமையில் ஜமைக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் சூழலுக்கு ஏற்ப தயாராவதோடு, ஜூலை முதல் வாரம் முதல் பயிற்சி போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.
பிசிசிஐ-ன் இந்த மாற்றத்திற்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வியே காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜூலை முதல் வாரத்தில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இளம் வீரர்களுடன் இணைய உள்ளனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.