கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து தொடக்க வீரர் ஃபின் ஆலன் 33 பந்துகளில் சதம் விளாசி புதிய வரலாறு படைத்தார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் அவர் படைத்த சாதனைகளைப் பார்த்து வியந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவரைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.
அரையிறுதிப் போட்டிகள் என்றாலே ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் ஃபின் ஆலன் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை மிக விரைவாக முடித்துவிட்டார். இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது பதிவில், "பொதுவாக அரையிறுதிப் போட்டிகள் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஆனால் இன்று, நாங்கள் இருக்கையில் சௌகரியமாக அமருவதற்கு முன்பாகவே ஃபின் ஆலன் ஆட்டத்தை முடித்துவிட்டார். மிகச் சிறந்த ஆட்டம்" என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இந்த ஆட்டத்தில் 170 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து அணி 12.5 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது. டிம் செய்ஃபெர்ட் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த நிலையில், ஃபின் ஆலன் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 33 பந்துகளில் 100 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

ஃபின் ஆலனின் இந்த 33 பந்து சதம், டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்ட மிக அதிவேக சதமாகும். இதற்கு முன் 2016 டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரிஸ் கெய்ல் 47 பந்துகளில் அடித்த சதமும், 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் அடித்த சதமுமே சாதனையாக இருந்தன. அந்த இரண்டு சாதனைகளையும் ஆலன் தற்போது முறியடித்துள்ளார்.
மேலும், டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோரும் இதுவே ஆகும். இதற்கு முன் 2009 உலகக் கோப்பையில் இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன் 96 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு அணிக்கு எதிராக சர்வதேச டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட மிக அதிவேக சதம் என்ற பெருமையையும் ஆலன் பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா 33 பந்துகளில் அடித்த சதத்தின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றிலும் இந்த இன்னிங்ஸ் பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. இதற்கு முன் 2020 ஆம் ஆண்டு க்ளென் பிலிப்ஸ் 46 பந்துகளில் அடித்த சதமே நியூசிலாந்து வீரரின் அதிவேக சர்வதேச டி20 சதமாக இருந்தது. பிரண்டன் மெக்கல்லம் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோருக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த மூன்றாவது நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் ஆவார். இந்த ஆட்டத்தில் அவர் 18 பவுண்டரிகளை விளாசியுள்ளார். இது 2012 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக மெக்கல்லம் படைத்த சாதனைக்குச் சமமானதாகும்.
அதேபோல, ஒரு டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் 8 சிக்ஸர்கள் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் மற்றும் நாக் அவுட் சுற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்த ஆட்டத்தில் 303.03 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய அவர், வெறும் 4 பந்துகளில் மட்டுமே ரன் எடுக்காமல் இருந்துள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் 30 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்ட வீரர்களில், குறைவான பந்துகளில் ரன் எடுக்காமல் இருந்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். 2014 அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி 3 பந்துகளில் மட்டுமே ரன் எடுக்காமல் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.