கயானா: வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கயானாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மட்டும் 17 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷமர் ஜோசப் 5 விக்கெட்களும், ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்களும் வீழ்த்தினர். தென்னாப்பிரிக்க அணியில் பெட்டிங்காம் 28, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 26, வெர்ரேனி 21 ரன்கள் எடுத்தனர். பின்னர் 9 மற்றும் 10ஆம் வரிசை பேட்ஸ்மேன்களான பீட் மற்றும் நான்ட்ரே பர்கர் 10வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர். பீட் 38 ரன்களும், பர்கர் 23 ரன்களும் சேர்த்தனர்.

தென்னாப்பிரிக்காவை 160 ரன்களுக்கு சுருட்டியதை நினைத்து வெஸ்ட் இண்டீஸ் அணி உற்சாகத்தில் கரை புரண்டது. ஆனால், அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தபோது அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 56 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது வெஸ்ட் இண்டீஸ்.
பின்னர் ஜேசன் ஹோல்டர் 33 ரன்கள் எடுத்து விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 97 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து உள்ளது. அந்த அணியால் தென்னாப்பிரிக்கா அணி எடுத்த 160 ரன்கள் என்ற ஸ்கோரை தாண்ட முடியுமா என்பதே சந்தேகமாக உள்ளது.
இதன் மூலம் கயானா மைதானத்தின் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா இதை பயன்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்து இரண்டாவது இன்னிங்க்ஸில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்யும். இந்த பிட்ச்சில் 200 ரன்கள் எடுத்தாலே எளிதாக வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.