ஜோஹன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்த எஸ்.ஏ. டி20 தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி, சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது. இதற்கு முன் நடந்த இரண்டு எஸ்.ஏ.டி20 தொடர்களிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியே கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது முறையாகவும் அந்த அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. இந்த நிலையில் அந்த அணியை வீழ்த்தி இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி.
இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் ரியான் ரிக்கெல்டன் 15 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்திருந்தார். கானர் 26 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்திருந்தார். ஜார்ஜ் லிண்டே 14 பந்துகளில் 20 ரன்களும், டெவால்ட் ப்ரீவிஸ் 18 பந்துகளில் 38 ரன்களும் சேர்த்திருந்தனர்.

182 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி மிகப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அந்த அணியில் டோனி டி சார்ஸி 26 ரன்களும், டாம் ஆபேல் 25 பந்துகளில் 30 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 15 ரன்களும் எடுத்திருந்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வரிசையாக ஆட்டமிழந்தனர். அந்த அணி 18.4 ஓவர்களில் 105 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ககிசோ ரபாடா நான்கு விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளையும், ஜார்ஜ் லிண்டே இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று எஸ்.ஏ.டி20 கோப்பையை கைப்பற்றியது. ரபாடா, ட்ரென்ட் போல்ட்-டின் பந்துவீச்சால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் குழுமம் தனது 5 அணிகள் மூலம் கோப்பையை வென்று சாதனை புரிந்துள்ளது. ஐபிஎல், மகளிர் ஐபிஎல், இன்டர்நேஷனல் லீக் டி20, மாஸ்டர்ஸ் லீக் டி20 ஆகிய ஐந்து தொடர்களிலும் கோப்பை வென்ற ஒரே அணியாக உள்ளது மும்பை இந்தியன்ஸ் குழுமம்.