டர்பன் : மும்பை கேப் டவுன் அணிக்கு எதிரான போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
எஸ்ஏ20 லீக் தொடரின் 2வது போட்டியில் மும்பை கேப் டவுன் அணியை எதிர்த்து டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டிஎஸ்ஜி அணி கேப்டன் கேசவ் மகாராஜ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி தரப்பில் வான் டர் டூசன் - ரிக்கல்டன் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. வான் டர் டூசன் நிதானமான ரன்கள் சேர்த்தாலும், ரிக்கல்டன் வெளுத்து கட்டினார்.

இதனால் பவர் பிளே ஓவர்களுக்குள்ளேயே மும்பை அணி 50 ரன்களை கடந்தது. முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்த நிலையில், வான் டர் டூசன் 24 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த நட்சத்திர இளம் வீரர் பிரெவிஸ் 5 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் நின்றிருந்த ரிக்கல்டன் அரைசதம் அடித்து அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.
எதிர்முனையில் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், மும்பை அணியின் ஸ்கோர் 11 ஓவர்களிலேயே 120 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய ரிக்கல்சன் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 51 பந்துகளில் 6 சிக்ஸ், 6 ஃபோர்ஸ் உட்பட 87 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் வந்த பொல்லார்ட் 14 பந்துகளில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 31 ரன்களை விளாசினார். இதன் காரணமாக மும்பை கேப்டவுன் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்களை குவித்தது.
இதன்பின் களமிறங்கிய டிஎஸ்ஜி அணி 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் ப்ரீட்ஸ்கே அதிரடியாக ஆடிய டர்பன் அணியை மீட்டெடுத்தார். இவருடன் கிளாஸனும் இணைய டர்பன் அணியின் அதிரடியை மும்பை அணி பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் கிளாஸன் தனியாளாக ஆட்டத்தை முடிப்பார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் 35 பந்துகளில் 8 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 85 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.
இதனிடையே 16.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்திருந்த நிலையில், திடீரென மழை குறுக்கிட்டது. இந்த மழை தொடர்ந்து பெய்ததால், டர்பன் அணி 11 ரன்களில் டிஎல்எஸ் விதிப்படி வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி முதல் போட்டியிலேயே தோல்வியடைந்துள்ளது.