லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புதிய சைக்கிள் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் இந்தியாவும், இங்கிலாந்தும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றன. இந்த நிலையில் இந்தியா, இங்கிலாந்து விளையாடும் தொடருக்கு பட்டோடி கோப்பை என்று பெயர் இடப்பட்டிருந்தது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இப்திகார் அலி பட்டோடி, மற்றும் மன்சூர் அலிகான் பட்டோடி ஆகியோரின் நினைவாக இந்தத் தொடர் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நவீன கால கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயரை தொடருக்கு சூட்டும் பழக்கத்தை வைத்தது.

அதன்படி இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் தொடருக்கு க்ரோவ்- தோர்பே கோப்பை என்று பெயர் மாற்றப்பட்டது.அந்த வகையில் தற்போது பட்டோடி கோப்பையை பெயரை சச்சின் ஆண்டர்சன் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் பிசிசிஐயும் இணைந்து மாற்றி இருக்கிறது.
உலக கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே இந்த இரண்டு வீரர்கள் மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார்கள். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கர், 200 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 2013ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆண்டர்சனை பொறுத்தவரை கடந்த ஆண்டு ஜூலை வரை விளையாடி 188 போட்டிகளில் ஆடி இருந்தார்.
மேலும் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இந்த இரண்டு ஜாம்பவான்களை போற்றும் விதமாக தற்போது இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சச்சின் ஆண்டர்சன் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
இதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது சச்சினுக்கு கிடைக்கப் பெற்றிருக்கும் மிகப்பெரிய கௌரவம் என்று பாராட்டி உள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆண்டர்சன், தாம் பந்து வீசியதில் சச்சின் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாராட்டி இருக்கிறார். அவருடைய பெயருடன் தமது பெயர் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.