மும்பை : நமது இந்திய கலாச்சாரத்தில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடத்துவது என்றால் பல விஷயங்கள் குறித்து பெரியவர்கள் முடிவெடுப்பார்கள். அதில் முதலாவது விஷயம் ஆணுக்கு பெண்ணை விட வயது அதிகம் இருந்தால் தான் திருமணம் பந்தமே நடக்கும்.
ஆனால் சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வயது வரம்பு எதுவுமே பார்க்காமல் தன்னைவிட ஆறு வயது அதிகம் உள்ள பெண்ணை சச்சின் டெண்டுல்கர் காதலித்து மணந்தார் இது எப்படி சாத்தியமாயிற்று என்று தற்போது பார்க்கலாம்.

தன்னை விட ஒரு வயது அதிகம் இருந்ததாலே கார்த்திக்கை சின்ன பையன் என்று ஜெஸ்ஸி கழற்றிவிட்ட கதை நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் தன்னைவிட ஆறு வயது சிறுவனை எப்படி அஞ்சலி திருமணம் செய்து கொண்டார் என்று பலருக்கும் இன்றுவரை தெரியாமல் இருக்கிறது. இதற்கு காரணம் சச்சின் தன்னுடைய சிறு வயதிலே புகழின் உச்சிக்கு சென்று விட்டார். சச்சின் தொடர்பாக எந்த ஒரு தவறான செய்தியும் அப்போது செய்தித்தாள்களில் வந்தது கிடையாது.
சச்சின் பல வெளிநாடு தொடர்களில் சென்று அபாரமாக விளையாடிய தருணம் அது. இந்த நிலையில் சச்சின் மும்பை விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்து இறங்கினார். அப்போது அஞ்சலி தன்னுடைய தாயாரை அழைப்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தார். அப்போது சச்சின் டெண்டுல்கரை பார்த்தவுடன் அஞ்சலி திடீரென்று கத்தி கூச்சல் போட்டுவிட்டாராம். சச்சின் அப்போது சிறுவன் என்பதால் நம்மைப் பார்த்து யார் இப்படி ஆர்ப்பரிக்கிறார் என்று ஆச்சரியமாக பார்த்தாராம்.
அன்றிலிருந்து அஞ்சலி மீது சச்சினுக்கு ஒரு இனம் பிரியாத உணர்வு வந்திருக்கிறது. அதன் பிறகு தனது குடும்ப நண்பர்கள் மூலம் அஞ்சலியை மீண்டும் சந்தித்து இருக்கிறார் சச்சின். அப்போது எப்படி இருக்கீங்க என சச்சின் ,அஞ்சலியை பார்த்து கேட்க, என்னை எப்படி உங்களுக்கு தெரியும் என அஞ்சலி பதில் அளித்திருக்கிறார். அதற்கு நான் விமான நிலையத்தில் வந்த போது என் பெயரை சொல்லி கத்தி கூச்சிலிட்டது நீ மட்டும் தான். உன்னை எப்படி என்னால் மறக்க முடியும் என சச்சின் கேட்டிருக்கிறார்.
அப்படி ஆரம்பித்தது தான் இந்த லவ் ஸ்டோரி. அஞ்சலி அப்போதே மருத்துவ படிப்பில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இதன்பிறகு இருவரும் ஐந்து ஆண்டுகள் ஜோடியாக ஊர் சுற்றி இருக்கிறார்கள். சச்சின் தன்னை விட அஞ்சலி மூத்தவள் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அதேபோல் அஞ்சலியும் நாம் சச்சினை விட மூத்தவள் என்றும் எண்ணியது இல்லையாம். இருவரும் காதலித்தாலும் தங்களுடைய பணியில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள்.
இதனால் அவர்களுடைய காதலுக்கு வீட்டில் எந்த பிரச்சனையுமே எழவில்லை. இதனால் 1995 ஆம் ஆண்டு சச்சினுக்கும் அஞ்சலிக்கும் திருமணம் நடைபெற்றது. அஞ்சலி மருத்துவராக இருப்பினும் சச்சினுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த பணியை விட்டு விட்டாராம். இதையெல்லாம் பார்த்து 90'ஸ் கிட்ஸ் 2கே கிட்ஸ் கற்றுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற்று விட்டால் உங்களுடைய தனிப்பட்ட முடிவில் யாருமே தலையிட மாட்டார்கள்.