
மறக்க முடியாத சாதனை
சச்சின் டெண்டுல்கரின் மறக்க முடியாத சாதனை அவரது நூறு சர்வதேச போட்டி சதங்கள் தான். அந்த சாதனையை அத்தனை எளிதில் வேறு எந்த வீரரும் தொட்டு விட முடியாது. தற்போது உள்ள வீரர்களின் விராட் கோலி அதை அடைவார் என கூறப்படுகிறது.

கடும் சோதனைகள்
அந்த சாதனையை அவர் செய்து முடிக்கும் முன் கடும் சோதனைகளை சந்தித்தார். 99 சர்வதேச சதங்களை எட்டிய நிலையில் அவரால் நூறாவது சதத்தை எட்ட முடியவில்லை. பல முறை 90 ரன்களில் ஆட்டமிழந்து வந்தார்.

ஏமாற்றம் அடைந்தனர்
சச்சின் ரசிகர்கள் அதனால் கடும் சோதனைக்கு உள்ளானார்கள். பல முறை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். சச்சினுக்கும் அது கடும் அழுத்தத்தை கொடுத்தது. அவரது பேட்டிங் கூட அதனால் பாதிப்பை சந்தித்தது. 2012ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக சச்சின் தன் நூறாவது சதத்தை கடந்தார்.

இங்கிலாந்து டெஸ்ட் போட்டி
அதற்கு முன் 2011இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் 91 ரன்கள் அடித்து இருந்தார். அப்போது தான் அம்பயர் தவறாக தீர்ப்பு அளிக்க, அவர் வெளியேறினார். இல்லை என்றால் அந்தப் போட்டியிலேயே அவர் நூறாவது சதத்தை கடந்திருப்பார்.

எல்பிடபுள்யூ அவுட்
ஓவல் மைதானத்தில் நடந்த அந்த டெஸ்ட் போட்டியில் சச்சின் சிறப்பாக ஆடி வந்தார். அவர் 90களை தொட்ட உடன் ரசிகர்கள் இடையே பரபரப்பு தொற்றியது. அப்போது 91 ரன்கள் எடுத்த நிலையில் டிம் பிரெஸ்னன் பந்துவீச்சில் அவருக்கு எல்பிடபுள்யூ அவுட் கொடுத்தார் அம்பயர் ரோட் டக்கர்.

தவறான அவுட்
அது பற்றி டிம் பிரெஸ்னன் பேட்டியில் கூறுகையில், "அந்த பந்து லெக் சைடு ஸ்டம்பை தவற விட்டது. ஆஸ்திரேலிய அம்பயர் ரோட் டக்கர் அவுட் கொடுத்து விட்டார். அவர் நிச்சயம் சதம் அடிக்கும் நிலையில் இருந்தார். நாங்கள் அந்த தொடரை வென்று நம்பர் 1 டெஸ்ட் அணியாக மாறினோம்" என்றார்.

கொலை மிரட்டல்
"எங்கள் இருவருக்கும் கொலை மிரட்டல் வந்தது. எனக்கும், அம்பயருக்கும் பல நாட்கள் கழிந்த பின்னரும் மிரட்டல்கள் வந்து கொண்டே இருந்தன. எனக்கு ட்விட்டரில் வந்தது. அவருக்கு அவரது வீட்டு முகவரிக்கு சிலர் கடிதம் எழுதி மிரட்டினர்." என்றார்.

காவல்துறை பாதுகாப்பு
"என்ன தைரியம் இருந்தால் அவருக்கு அவுட் கொடுப்பாய்? அது லெக் சைடு மிஸ் ஆனது" என தெளிவாக கூறி மிரட்டல்கள் வந்தன. சில மாதங்கள் கழித்து நான் அம்பயருடன் பேசினேன். அவர் பாதுகாவலர்களை வைத்துக் கொண்டுள்ளேன் என்றார். அவருக்கு ஆஸ்திரேலியாவில் காவல்துறை பாதுகாப்பும் அளிக்கப்பட்டது" என கூறினார் டிம் பிரெஸ்னன்.

தீவிரமான ரசிகர்கள்
இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் எந்த அளவுக்கு இந்த விளையாட்டை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார்கள், சச்சின் மேல் எந்த அளவுக்கு வெறியாக இருந்துள்ளனர் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.


Click it and Unblock the Notifications











