துபாய்: இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி இந்திய அணியை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு உள்ளனர்.
சவுரவ் கங்குலி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்ன என்பதையும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் இரண்டு ஐசிசி கோப்பைகளை இந்திய அணி வென்றதற்கு காரணம் என்னவென்றும் சுட்டிக்காட்டி பாராட்டி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் வெற்றியால் அடைந்த மகிழ்ச்சியில் ஒரே வரியில் வாழ்த்துப் பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

சச்சின் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில் "சாம்பியன்ஸ் டிராபி சாம்பியன்ஸ்..!" என மட்டும் பதிவிட்டு இருக்கிறார். சவுரவ் கங்குலி வெளியிட்டிருக்கும் பதிவில், "சிறப்பான முயற்சி இந்திய அணி. கடந்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு உள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கில் அதிக ஆழம் உள்ளது. ரோஹித் சர்மா கேப்டனாக அற்புதமாக செயல்பட்டுள்ளார்" என்று கூறி இருக்கிறார்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் எட்டாம் இடம் வரை பேட்டிங் செய்ய வீரர்கள் இருப்பதாலேயே இந்திய அணி கடந்த இரண்டு ஆண்டுகளில் 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு சர்வதேச கிரிக்கெட் தொடர்களை வென்று இருக்கிறது என சவுரவ் கங்குலி சுட்டிக்காட்டி இருக்கிறார்.
2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அதிக ஆல்ரவுண்டர்களுடன் விளையாடியது. அப்போதும் இந்திய அணியில் எட்டாம் வரிசை வரை வீரர்கள் இருந்தனர். ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா என 10 ஓவர்கள் வரை பந்து வீசக்கூடிய ஆல்ரவுண்டர்கள் அணியில் இருந்ததால் இது சாத்தியமானது.
இந்த மூவரும் 2024 டி20 உலகக் கோப்பையிலும் விளையாடி இருந்தனர், தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாடி இருந்தனர். இதைத்தான் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சுட்டிக்காட்டி பாராட்டி இருக்கிறார். ஐந்து முழு நேர பேட்ஸ்மேன்கள், மூன்று ஆல்-ரவுண்டர்கள், மூன்று முழு நேர வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற இந்திய அணியின் இந்த வியூகம் தான் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க காரணமாக இருந்து வருகிறது.