கட்டாக்: சச்சின் அபாரமாக 96 ரன்களைக் குவிக்க, ஜடேஜா பந்து வீச்சில் அமர்க்களப்படுத்த, 3வது ஒரு நாள் போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.கட்டாக்கில் நேற்று 3வது ஒரு நாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடந்தது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. ஆரம்பத்தில் படு வேகமாக ரன்களைக் குவித்தது இலங்கை.ஆனால் ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சை இலங்கை மட்டையாளர்களை தவிடு பொடியாக்கி விட்டது. அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தியப் பந்து வீச்சு நேற்று ஒட்டுமொத்தமாக சிறப்பாக இருந்ததால் இலங்கை அணி 44.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 239 ரன்களில் சுருண்டு போனது.பின்னர் ஆடத் தொடங்கிய இந்தியாவுக்கு ஷேவாக் வழக்கம் போல படு வேகமான தொடக்கத்தைக் கொடுத்தார். மின்னல் வேகத்தில் ஆடி 44 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் ஷேவாக். மறு முனையில் அவருடன் இணைந்து ஆட்டத்தைத் தொடங்கிய டெண்டுல்கர் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி வரை ஆட்டமே இழக்காமல் 96 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார். 104 பந்துகளைச் சந்தித்த டெண்டுல்கர் 4 ரன்களில் சதத்தை கோட்டை விட்டார். அவருக்குத் துணையாக கம்பீர் 32 ரன்களும், யுவராஜ் சிங் 23 ரன்களும் சேர்த்தனர். திணேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தார்.இறுதியில், 42.4 ஓவர்களிலேயே இந்தியா 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 242 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முன்னதாக அபாரமாக பந்து வீசி இலங்கையின் ரன் குவிப்பை நொறுக்கிய ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற முன்னிலையைப் பெற்றுள்ளது.நான்காவது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் 24ம் தேதி நடக்கிறது. இதிலும் ஷேவாக் தலைமையில் இந்தியா ஆடவுள்ளது.