மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் இடையிலான நிச்சயதார்த்தம் குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார். அர்ஜுன் டெண்டுல்கரின் அடுத்தக் கட்ட வாழ்க்கைக்குள் நகர்வதை பார்க்க அனைவரும் ஆவலாக இருப்பதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அதேபோல் ரஞ்சி டிராபி தொடரில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார். 25 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர், நீண்ட நாட்களாக தனது அக்கா சாராவின் தோழி சானியா சந்தோக் உடன் காதல் உறவில் இருந்து வந்தார்.

இந்த விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்தபின், நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கின்றனர். இதன்பின் குடும்பத்தினர் இடையில் நல்ல புரிதல் ஏற்பட, உடனடியாக திருமண நிச்சயதார்த்தத்தை முடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரு வாரத்திற்கு முன்பாக மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் இடையிலான நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இந்த நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. அக்கா சாரா டெண்டுல்கர் இருக்கும் போது இளையவரான அர்ஜுன் டெண்டுல்கருக்கு முன்னதாக நிச்சயம் செய்தது ஏன் என்ற கேள்விகளும் எழுந்தன. ஆனால் சாரா தனது திருமணத்திற்கு இன்னும் சில காலம் தேவை என்று கோரியதால், முதலில் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்திருக்கிறார்.
ஆனால் அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் நிச்சயம் குறித்து இரு குடும்பத்தினர் யாருமே நேரடியாக கூறவில்லை. இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் ரெடிட் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் பயனர் ஒருவர், உண்மையிலேயே அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு சச்சின் டெண்டுல்கர், ஆம்.. அர்ஜுன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. அவர் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தில் அடி எடுத்து வைப்பதை பார்க்க நாங்கள் அனைவரும் ஆவலாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள பிரபல இண்டர்காண்டினண்டல் ஹோட்டல் அதிபரின் பேத்தியான சானியா சந்தோக், பெட் கிளினிக் நடத்தி வருகிறார்.
சானியா சந்தோக்கின் குடும்பத்தின் வருமானம் மட்டும் கடந்த ஆண்டு ரூ.624 கோடியாகும். ஹோட்டல் மற்றும் 2 வகையான ஐஸ் க்ரீம் பிராண்ட்களையும் சானியா சந்தோக் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். இதனால் விரைவில் அர்ஜுன் டெண்டுல்கரும் தொழில் முதலீடுகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.