டர்பன்: சச்சின் டெண்டுல்கர் 4 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்காக இன்று டுவென்டி 20 போட்டியில் பங்கேற்கிறார். டர்பனில் நடக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கான போட்டியில், இந்திய அணியில் சச்சினும் இடம் பெற்றுள்ளார்.
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் பொதுவாக டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்காக ஆடுவதில்லை. இளைஞர்களுக்கு வழி விடும் வகையில் அவர் ஒதுங்கிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கேற்று ஆடுகிறார்.
3வது ஐபிஎல் தொடரில் இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் அவரது ஆட்டத்தில் அனல் பறந்ததைப் பார்த்த பலரும் சச்சின் இந்தியாவுக்காகவும் ஆட வேண்டும் என்று வலியுறுத்தினர். குறிப்பாக உலகக் கோப்பை டுவென்டி 20 தொடரிலும் சச்சின் பங்கேற்க கோரினர். ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டு கேட்டுக் கொண்டதையடுத்து, அவர் இன்று களம் இறங்குகிறார்.
இந்த போட்டி தான் தென் ஆப்பிரிக்க வீரர் மகாயா நிதினியின் கடைசி ஆட்டம் ஆகும். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2 மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இதனால் இந்திய அணியில் சச்சினும் இடம் பெற்று நிதினியைக் கெளரவப்படுத்த ஆடுகிறார்.
சச்சின் கடந்த 2006-ம் ஆண்டு ஜொகன்னஸ்பர்கில் நடந்த சர்வதேச டுவென்டி 20ல் தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து ஆடினார். அதில் அவர் 12 பந்துகளில் 10 ரன் எடுத்தார்.