
73ல் உதித்த கிரிக்கெட் ஸ்டார்
1973ம் ஆண்டு ஏப்ரல் 24ம்தேதி மும்பையி்ல் பிறந்தார் சச்சின் டெண்டுல்கர். இளம் வயதிலேயே கிரிக்கெட் நுனுக்கங்களை கப்பென்று பிடித்துக் கொள்ளும் கற்பூரமாக இருந்தார் சச்சின்.

இவரையும் பட்டை தீட்டியது சிவாஜியே...
இன்றைய நடுத்தர வயதைத் தாண்டிய நடிகர்களுக்கு எப்படி சிவாஜி கணேசன் முன்னுதாரணமாக இருக்கிறாரோ.. அதே போலத்தான் மும்பையில் அன்றைய இளம் சிறார்களுக்கு கிரிக்கெட் ஆட சரியான களமாக, முன்னுதாரணமாக சிவாஜி பார்க் இருந்தது. அங்குதான் தொடங்கியது சச்சினின் கிரிக்கெட் பிராக்டிஸும்...

பர்மன் நினைவாக..
சச்சின் என்ற பெயர் வந்ததற்கு ஒரு சுவாரஸ்ய பின்னணி உள்ளது. நிறையப் பேர் தங்களது சினிமா ஹீரோக்களின் பெயர்களை பிள்ளைகளுக்கு வைப்பார்கள்.. அதேபோலத்தான் சச்சினின் தந்தை ரமேஷ் டெண்டுல்கரும், தனக்குப் பிடித்த இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் பெயரை எடுத்து சச்சின் என்று வைத்து விட்டார்.

முரட்டுப் பையன்...
சச்சின் இப்போதுதான் சாந்த சொரூபியாக இருக்கிறார். ஆனால் சிறு வயதில் அதாவது பள்ளிக்கூட சிறாராக இருந்தபோது தனது வகுப்புப் பசங்களை கிள்ளுவது, அடிப்பது, பென்சில் பாக்ஸை பிடுங்குவது என்று ஏகப்பட்ட ரகளைகளைச் செய்வாராம்.

அண்ணன் காட்டிய வழி...
இதைப் பார்த்த அவரது அண்ணன் அஜீத் டெண்டுல்கர்தான், சச்சினை விளையாட்டின் பக்கம் திருப்ப முடிவுசெய்தார். அவர் காட்டிய வழிதான்.. கிரிக்கெட். 1984ம் ஆண்டுதான் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார் சச்சின்.

அச்ரேகர் ஆசியுடன்
அப்போது பிரபலமான கிரிக்கெட் பயிற்சியாளரான ரமாகாந்த் அச்ரேகரிடம் கூட்டிக் கொண்டு போய் இவனை சரி பண்ணுங்க என்றாராம் அஜீத்.

சிவாஜி பார்க்கில் ஆரம்பத்த பயணம்
பிறகென்ன, சிவாஜி பூங்காவுக்குக் கொண்டு போய் சச்சின் கையில் கிரிக்கெட் பேட்டைக் கொடுத்து பிராக்டிஸை ஆரம்பித்தார் அச்ரேகர்.

ஆச்சரியப்படுத்திய சச்சின்
எடுத்த எடுப்பிலேயே அச்ரேகரை அசத்தினார் சச்சின். அவரது விளையாட்டு ஆர்வத்தை விட கற்றுக் கொண்ட வேகமும், சின்னச் சின்ன நுனுக்கங்களைக் கூட சிறப்பாக செய்தது ஆகியவை அச்ரேகரை கவர்ந்தது. உடனே பையன் ஸ்கூலை மாத்துங்க, சாரதாஷ்ரம் வித்யாமந்திரில் சேருங்கள் என்று சச்சின் குடு்ம்பத்துக்கு அட்வைஸ் செய்தார்.

பள்ளியில் பிரபலம்
இந்தப் பள்ளிக்கூடத்தில் அப்போது கிரிக்கெட் பிரபலம். அந்தப் பள்ளியின் கிரிக்கெட் அணியும் பிரபலம். அது சச்சினுக்கும் உதவியாக இருந்தது.

ஒத்த ரூபா தர்றேன்...சச்சினை டிஸ்மிஸ் செய் பார்ப்போம்
சச்சின் அச்ரேகர் பயிற்சியில் சிறந்து விளங்க ஆரம்பித்தார். அவருக்கு மேலும் சவால் தரும் வகையில் ஸ்டம்ப் மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைப்பாராம் அச்ரேகர். சச்சின் விக்கெட்டை வீழ்த்தும் பந்து வீச்சாளர் அதை பரிசாக எடுத்துக் கொள்ளலாம்.

பிரபலமடைந்தார்
பள்ளிக்கூடத்தில் படித்தபோது இவரும் நண்பர் வினோத் காம்ப்ளியும் சேர்ந்து குவித்த இமாலய ரன்கள்தான் சச்சின் மீது வெளிச்சம் விழக் காரணமாக அமைந்தது.

சச்சினுக்கு வாய்ப்பளித்த துங்கார்பூர்
ராஜ்சிங் துங்கார்பூர்தான் சச்சினை இந்திய அணியில் சேர்க்க முக்கியக் காரணம் ஆவார். இவரது தேர்வின் அடிப்படையில்தான் 1989ம் ஆண்டு சச்சின் இந்திய அணியில் முதல் முறையாக இணைந்தார்.

பாகிஸ்தான் பயணம்
அந்த ஆண்டு இந்திய கிரி்க்கெட்அணி ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போதைய பாகிஸ்தான் அணியில் பெரிய ஜாம்பவான்கள் இருந்த நேரம் அஏது.

முதல் டெஸ்ட்
கராச்சியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் சச்சின் அறிமுகமானார். அதில் அவர் எடுத்த ரன்கள் 15தான்... வக்கார் யூனிஸ் பந்தில் வீழ்ந்தார். அப்போது அவருக்கு வயது 16..

மூக்கை உடைத்த இம்ரான் கான்
அப்போதைய அதி வேகப் பந்து வீச்சாளரான இம்ரான்கான் சச்சினுக்கு பெரும் சோதனையாக அமைந்தார். சியால்கோட்டில் நடந்த 4 மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின்போது இம்ரான் போட்ட பந்து சச்சின் மூக்கைப் பதம் பார்த்து ரத்தம் வர வைத்தது. ஆனால் மைதானத்தை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து ஆடினார் சச்சின்.

அப்துல் காதிரைப் பதம் பார்த்தார்...
இந்தப் போட்டிகள் சச்சின் பெயர் சொல்லும் வகையில் இல்லை. ஆனால் அடுத்து நடந்த ஒரு நாள் போட்டியில் அப்துல் காரின் பந்து வீச்சை நையப்புடைத்தபோது சச்சின் மீது அத்தனை பேரின் கண்களும் விழுந்தன. காரணம், காதிர் அபாரமான சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 18 பந்துகளில் 53 ரன்களைக் குவித்தார் சச்சின் அந்தப் போட்டியில். அதில் காதிர் பந்து வீ்ச்சில் ஒரே ஓவரில் 27 ரன்களைக் குவிக்க காதிர் ஷாக் ஆகி விட்டார்.

பிறகு நடந்தது வரலாறு...
இதுதான் சச்சின் பிரமாதப்படுத்திய முதல் போட்டி.. அதற்குப் பிறகு நடந்தது வரலாறு.. அதன் பின்னர் சச்சி்ன் ஆடிய ஆட்டமெல்லாம் டாக்குமென்டரி போல மாறியது. வரலாற்றுப் பெட்டகத்தில் வைக்கப்பட்ட போட்டிகள் அவை.

மேற்கு இந்தியத் தீவுகளுடன் முடியும் பயணம்
இன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனான தொடருடன் விடை பெறவுள்ளார் சச்சின்.
நிச்சயம் சச்சின் போல இனி ஒரு வீரர் வருவது கஷ்டமானது.. சிறந்த வீரர்கள் வரலாம். ஆனால் சச்சின் போல நீடித்து நிலைத்து நின்று இத்தனை காலம் சாதித்த வீரர்களைப் போல இனி ஒருவர் வருவதற்கு பல காலம் காத்திருக்க வேண்டும்.....
இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் போவது பெரிய இழப்புதான்.. சந்தேகமே இல்லை...


Click it and Unblock the Notifications











