மும்பை: சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கரின் பேட்டிங் திறமை புறக்கணிக்கப்படுவதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யோக்ராஜ் சிங், கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதிக்கு பந்துவீச்சு ஆல்-ரவுண்டராகவே அர்ஜுன் அறியப்படுகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கர் முதல் தர கிரிக்கெட்டில் 21.37 சராசரியும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 18.25 சராசரியும், டி20 போட்டிகளில் 13.50 சராசரியும் வைத்துள்ளார். 2022 ரஞ்சி கோப்பை அறிமுகப் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 7வது இடத்தில் சதம் அடித்ததுடன், சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இரண்டு அரை சதங்களையும் பதிவு செய்துள்ளார்.

சமீபகாலமாக கோவா அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில் அவருக்கு அதிக பேட்டிங் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2025-26 சையத் முஷ்டாக் அலி மற்றும் தற்போது நடைபெறும் 2025 விஜய் ஹசாரே டிராபி தொடர்களில் அவர் சில சமயங்களில் தொடக்க ஆட்டக்காரராகவும் களமிறங்கினார்.
மும்பைக்கு எதிரான லிஸ்ட் ஏ ஆட்டத்தில், தொடக்க வீரராகக் களமிறங்கிய அர்ஜுன், ஷர்துல் தாகூரால் அவுட்டாவதற்கு முன் 27 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். 2025-26 SMAT தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் 14 சராசரியில் 70 ரன்கள் குவித்துள்ளார்.
யோக்ராஜ். அளித்த பேட்டியில், "நீங்கள் அவரது பந்துவீச்சில் மட்டுமே கவனம் செலுத்துகிறீர்கள். அர்ஜுன் அடிப்படையில் ஒரு பேட்ஸ்மேன். பேட்டிங் செய்யச் சொன்னபோது, தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதில்லை என அர்ஜுன் என்னிடம் கூறினார். வலைப்பயிற்சியில் பவுண்டரிகளை அடித்ததைக் கண்டு, அவரது பயிற்சியாளரிடம் ஏன் பேட்டிங் வாய்ப்பு தரவில்லை என நான் கேட்டேன். அர்ஜுன் தன் தந்தையைப் போலவே தரமான பேட்ஸ்மேன் என்பதையும் எடுத்துரைத்தேன்."
தனது ஒரே ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக 9வது இடத்தில் களம் இறங்கிய அர்ஜுன், 9 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். கடந்த சீசனில் ஒரு போட்டிகளிலும் விளையாடாததால், 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன், மும்பை இந்தியன்ஸ் அணியால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு (LSG) ₹30 லட்சம் விலைக்கு மாற்றப்பட்டார்.அர்ஜுன் அடுத்ததாக 2025-26 விஜய் ஹசாரே டிராபியின் ஐந்தாவது சுற்றில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கோவா அணி ஜனவரி 3, சனிக்கிழமை அன்று உத்தரகாண்டை எதிர்கொள்ள உள்ளது.