அடிக்கடி என்னை விட்டு விட்டு போய் விடுவார்கள்.. சச்சின் ஏக்கப் பெருமூச்சு!
மும்பை: தன்னால் மறக்க முடியாத விடுமுறை பற்றி நிகழ்ச்சி ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவரது கடைசி ஆட்டத்தை காண இந்தியா மட்டுமின்றி உலக ரசிகர்களும் பேராவலாக உள்ளனர்.
ஆனால் ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைப்பது தான் குதிரைக் கொம்பாக உள்ளது. இந்நிலையில் சச்சின் முசாபிர்.காம் என்ற டிராவல் இணையதள அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,

ஆதரவுக்கு நன்றி
கடந்த 24 ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்து, வாழ்த்திய இந்திய மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் சச்சின்.

ஐஸ்லாந்து
என்னால் மறக்க முடியாத விடுமுறை என்றால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது குடும்பத்தாருடன் ஐஸ்லாந்துக்கு சென்றது தான். அங்கு இயற்கை அழகை ரசித்தோம். அங்கு வாங்குவதற்கு எதுவும் இல்லாததால் கிரெடிட் கார்டுகள் பாக்கெட்டிலேயே இருந்தன என்று சச்சின் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 2-3 விடுமுறை
எனது குடும்பத்தினர் ஆண்டுக்கு 2 முதல் 3 விடுமுறை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. சில நேரங்களில் அவர்கள் என்னை விட்டுவிட்டு விடுமுறைக்கு எங்காவது செல்வார்கள் என்று சச்சின் கூறினார்.

தாஜ் மஹால்
இந்தியாவில் அவர்கள் தாஜ் மஹால், ஜாலியன் வாலா பாக், பொற் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். இவையெல்லாம் இந்தியாவை பற்றி நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க உதவும் என்றார் சச்சின்.

உலக நாடுகள்
கிரிக்கெட் விளையாடுவதால் நான் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளேன். மேலும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றுள்ளேன். இந்தியாவில் நான் அனைத்து இடங்களையும் பார்த்துவிட்டேன் என்று கூற முடியாது. ஆனால் பெரும்பாலான இடங்களை பார்த்துள்ளேன் என்று சச்சின் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications