மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 100 முறை சதம் அடித்து இருக்கிறார். ஆனால், அவர் இன்று அடித்த அரைசதம் மிகவும் முக்கியமானது. ஆம், நமது குழுந்தை பருவம் மற்றும் வாலிப பருவத்தை மகிழ்ச்சியில் நிறைய வைத்த சச்சினுக்கு இன்று 50வது பிறந்தநாள்.
சச்சின் டெண்டுல்கர், சாதனைகளை பற்றி Chat GPT யில் கேட்டாலே சொல்லிவிடும். கூகுளில் தேடினால், நாம் இது பற்றி எத்தனையோ ஆர்டிக்களை எழுதிவிட்டதை அது காட்டும். ஆனால் சச்சினுக்கு ஏன் இந்த அளவுக்கு பாராட்டு கிடைக்கிறது. அவரால் ஏன் இந்த சாதனையை தொட முடிகிறது என்பதை நினைத்து பார்த்து இருக்கிறீர்களா?

சச்சின் டெண்டுல்கர் என்றால், அது oxford டிக்சனரியில் ஒழுக்கம் மற்றும் உழைப்பு என்ற தான் பொருள் இருந்திருக்கும். நாம் செய்யும் தொழிலை கண்ணும், கருத்தாக இருந்தால், அதில் நாம் தான் உச்சத்தில் இருப்போம் என்பதற்கு உதாரணம் சச்சின் தான்.
சச்சினுடன் இணைந்த மற்றொரு கிரிக்கெட் வீரர் மது, போதை பழக்கங்களுக்கு ஆளாகி, தற்போது எனக்கு எதாவது வேலை கொடுங்கள் என்று கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், சச்சின் அப்படி எந்த கெட்ட பழக்கத்திலும் சிக்கவில்லை. பெயர் புகழ், மது போதை, பெண்கள் , பரிசு பொருட்கள், கோடி கோடியாக பணட் என்ற மாயக்காட்டில் சச்சின் ஒரு போதும் சிக்கியதில்லை.

தொடர்ந்து பயிற்சி, பயிற்சி என்று அந்த 22 யார்ட்களை தான், தனது வாழ்க்கையாகவே மாற்றி கொண்டார் சச்சின். கடவுளை எப்படி பய பக்தியுடன் வணங்கி நாம் பிரார்த்தனை செய்வோமோ, சச்சின், கிரிக்கெட்டை கடவுளாக நினைத்து, பய பக்தியுடன் இருந்து, வாழ்க்கையில் தமக்கு வேண்டியது எல்லாம் பெற்று கொண்டார்.
ஒரு முறை, சச்சினின் நண்பர்கள் எல்லாம் சினிமாவுக்கு சென்று இருக்கிறார்கள். ஆனால், சச்சின் கிரிக்கெட் பயிற்சி இருக்கு என்று மைதானத்திற்கு சென்றுவிட்டார். படம் முடிந்துவிட்டு, நண்பர்கள் சச்சினை பார்த்து, இன்று சினிமா சூப்பரா இருந்தது நீ மிஸ் பண்ணிட்ட என்று கூறிய உடன், சச்சினோ, இன்று பயிற்சியில் புதியதாக ஒரு ஷாட்டை நான் கற்று கொண்டேன். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நீங்க மிஸ் பண்ணிட்டீங்க என்று பதில் அளித்தாராம். இது தான் சச்சின்.. இது தான் அவருடைய வெற்றிக்கு காரணம்..