சச்சின் டெண்டுல்கர் - ஷேன் வார்னே ஒரே அணியில்.. பிக் பாஷ் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் போட்ட பிளான்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் தொடரின் ஆரம்பக் காலங்களில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை ஒரு போட்டிக்காக விளையாட வைக்க மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி மிகப்பெரிய ரகசியத் திட்டம் ஒன்றை வைத்திருந்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அந்த அணியின் முன்னாள் தலைவர் எடி மெகுவேர், ஒரு பேட்டியின் போது இந்த சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
சர்வதேச போட்டிகள் காரணமாக ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் விலகும்போது ஏற்படும் இடைவெளியை நிரப்ப எடி மெகுவேர் ஒரு யோசனையை முன்வைத்தார். "எங்கள் அணியின் 4 சிறந்த பேட்டர்களை நீங்கள் எடுத்துக்கொண்டால், அதற்கு மாற்றாக ஒரே ஒரு சர்வதேச நட்சத்திர வீரரை மட்டும் அழைத்து வர அனுமதி கொடுங்கள். நான் சச்சின் டெண்டுல்கரை அழைத்து வருகிறேன். அவர் விளையாடினால் மைதானம் 5 முறை நிரம்பி வழியும்" என்று அவர் அதிகாரிகளிடம் சவால் விட்டுள்ளார்.

வார்னே - சச்சின் கூட்டணி
குறிப்பாக, மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் அப்போது இருந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னேவுடன் இணைந்து, சச்சின் டெண்டுல்கரை ஒரு போட்டியில் விளையாட வைக்க அவர் விரும்பினார். சச்சின் மற்றும் வார்னே ஆகிய இரு பெரும் துருவங்கள் ஒரே அணியில் விளையாடினால், அது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய போட்டியாக இருந்திருக்கும் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேறாத கனவு
ஆனால், இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் விளையாட பிசிசிஐ அனுமதி அளிக்காததாலும், நடைமுறைச் சிக்கல்களாலும் இந்த பெரிய திட்டம் நிறைவேறாமல் போனது. அண்மையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிட்னி தண்டர் அணியில் விளையாட ஒப்பந்தமானார், ஆனால் காயம் காரணமாகப் பின்வாங்கினார். உன்முக்த் சந்த் மட்டுமே இதுவரை பிக் பாஷ் தொடரில் விளையாடிய ஒரே இந்திய வீரராக உள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் - ஷேன் வார்னே கூட்டணி ஒரே அணியில் இணைந்திருந்தால், அது டி20 கிரிக்கெட்டின் உச்சமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications
