மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்வில் அவரின் சிறுவயது பயிற்சியாளரான ரமாகாண்ட் அச்ரேக்கர் முக்கிய அங்கமாக இருந்துள்ளார். அதேபோல் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடிய வினோத் காம்ப்ளி, ரமேஷ் பவார், சஞ்சய் பங்கர், பராஸ் ஆம்ரே உள்ளிட்ட பலரும் அச்ரேக்கரின் சிஷ்யர்கள் தான். இவர் 2019ஆம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக மறைந்தார்.
இந்த நிலையில் ரமாகாண்ட் அச்ரேக்கரை போற்றும் வகையில் மும்பையில் அவருக்கு நினைவுச் சின்னம் திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, சஞ்சய் பங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக அச்ரேக்கரின் சிறந்த சிஷ்யர்களும், சிறுவயது நண்பர்களுமான சச்சின் - காம்ப்ளி இணைந்து பங்கேற்றது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

வினோத் காம்ப்ளி மேடையில் அமர்ந்திருந்ததை பார்த்த சச்சின் டெண்டுல்கர், நேரடியாக அவரிடம் சென்று உரையாட தொடங்கினார். அப்போது சச்சினின் கைகளை பிடித்து காம்ப்ளியும் உற்சாகமாக பேசினார். இதன்பின் நடந்த நிகழ்ச்சியில் அச்ரேக்கர்-க்காக பாடல் ஒன்றை பாடி வினோத் காம்ப்ளி பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வினோத் காம்ப்ளி கட்டுப்பாடின்றி இருந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாகவும் வினோத் காம்ப்ளி எழுந்து நிற்பதற்கு கூட இன்னொருவரின் உதவியை நாடிய வீடியோ ட்ரெண்டாகியது. இதனால் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பள்ளிக் கிரிக்கெட் போட்டியில் சச்சின் - வினோத் காம்ப்ளி இருவரும் இணைந்து 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது இருவரின் வாழ்விலும் திருப்புமுனையாக அமைந்தது. அங்கிருந்து ரஞ்சி டிராபி தொடரில் ஆடிய சச்சின் டெண்டுல்கர் முதல் போட்டியிலேயே சதம் விளாசி, இந்திய அணியில் இடம்பிடித்தார். அதன்பின் அடுத்த சில ஆண்டுகளிலேயே வினோத் காம்ப்ளியும் இந்திய அணிக்குள் வந்தார்.
சச்சின் தனது முதல் சர்வதேச சதத்தை விளாசுவதற்கு சில ஆண்டுகள் தேவைப்பட்ட போது, வினோத் காம்ப்ளி தனது 2வது டெஸ்டிலேயே இரட்டை சதம் விளாசி அசத்தினார். முதல் 7 டெஸ்ட் போட்டியிலேயே இரு இரட்டை சதம் உட்பட ஏராளமான சதங்களை விளாசினார். ஆனால் அடுத்த 10 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதத்தை கூட வினோத் காம்ப்ளியால் அடிக்க முடியவில்லை.

இறுதியாக 17 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளுடன் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 2018ஆம் ஆண்டு வரை இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடிய சில தலித் கிரிக்கெட் வீரர்களில் வினோத் காம்ப்ளியும் ஒருவர். பின்னர் 2000ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அவர், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
இதனிடையே சச்சின் டெண்டுல்கரின் ஆதரவு தனக்கு போதுமானதாக இல்லை என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். சச்சின் டெண்டுல்கரை விடவும் அதிக திறமை இருந்த போதும், புகழும் பணமும் அவரின் பாதையை மாற்றிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் - வினோத் காம்ப்ளி இணைந்து மேடையில் தோன்றிய வீடியோ ரசிகர்களிடையே பல்வேறு நினைவுகளையும் கிளறிவிட்டுள்ளது.