மும்பை: 2024 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. அந்த விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு சி கே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை வாங்கிய பின்னர் சச்சின் டெண்டுல்கர் பேசினார்.
அப்போது இந்திய அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கப் போவதில்லை என கூறிய அவர், அவர்கள் தங்கள் வாழ்க்கையை சீர்குலைத்துக் கொள்ளக் கூடாது எனவும், எல்லாம் இருக்கும்போது நாம் சரியான முறையில் நடந்து கொண்டு இந்த விளையாட்டையும் நாட்டையும் முன்னே கொண்டு செல்ல வேண்டும் என அவர் கூறினார்.

சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அதிக சுதந்திரத்துடன், அணியின் ஒற்றுமையை சிதற விடுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதை அடுத்து பிசிசிஐ இனி அனைத்து வீரர்களும் ஒன்றாகவே பயணம் செய்ய வேண்டும் எனவும், கிரிக்கெட் தொடர்களின் போது குடும்பத்தினரை உடன் அழைத்து செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில், சச்சினும் சூசகமாக எச்சரித்து இருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் பேசியதாவது: "கிரிக்கெட் இல்லாமல் நாம் அனைவரும் இங்கே இருக்க முடியாது. அதுவே என் வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு. உங்களிடம் இருக்கும் பேட் மற்றும் பந்தை திடமாகப் பிடிக்கவில்லை என்றால், உங்கள் கேரியரை மெதுவாக இழக்க ஆரம்பிப்பீர்கள். நமது வாழ்வில் சில கவனச்சிதறல்கள் இருக்கும்; ஆனால், அவை உங்கள் கேரியரை பாதிக்க விடாதீர்கள்."
"நம்மிடம் உள்ள அனைத்தையும் மதித்து, உங்கள் விளையாட்டை கவனித்துக் கொள்ளுங்கள். நாங்கள் அனைவரும் சமாளித்துவிட்டோம்; எங்களிடம் எதுவும் இல்லை. நம்மிடம் எல்லாம் இருக்கும்போது, அதை மதிப்பது முக்கியம். மேலும், விளையாட்டை முன்னேற்றவும், நாட்டின் பெயரை உயர்த்தவும் பொருத்தமான முறையில் நடந்துகொள்வது அவசியம்."
"நீங்கள் அனைவரும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள். உங்களிடம் நிறைய கிரிக்கெட் மீதமுள்ளது. வெளியே சென்று, உங்களின் சிறந்த செயல்பாட்டை கொடுங்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தியவுடன், சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கிருந்தீர்கள் என்பதை உணருவீர்கள்." என்றார் சச்சின் டெண்டுல்கர்.