சென்னை : கிரிக்கெட்டின் கடவுள் என்று கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் 51வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், லிட்டில் மாஸ்டர் குறித்து நட்சத்திர வீரர்களான தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கூறிய கருத்துகளை பார்க்கலாம்.
சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட்டின் முகமாக இன்றும் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர் தான். 1989ல் தொடங்கிய சர்வதேச கிரிக்கெட் பயணம், 2013ஆம் ஆண்டுடன் நிறைவுக்கு வந்தது. இந்த 24 ஆண்டுகளில் ஒவ்வொரு இந்திய இளைஞருக்கும் நம்பிக்கை கொடுத்தவர் தான் சச்சின் டெண்டுல்கர். இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட் வளர்ச்சியிலும் சச்சினின் பங்கை யாராலும் தொட முடியாது.

எந்த அளவிற்கு இந்திய கிராமங்களை சச்சின் எட்டினாரோ, அதற்கு நேர் மாறாக பொருளாதார ரீதியாகவும் பிசிசிஐ நிர்வாகத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றவர். 24 ஆண்டுகளில் 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள், 100 சதங்கள், 164 அரைசதங்கள் என்று யாராலும் கற்பனை கூட செய்ய முடியாத சாதனைகளை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார்.
"கிரிக்கெட்டின் கடவுள்" என்று கொண்டாடப்படும் சச்சினுக்கு இன்றைய உச்ச நட்சத்திரங்களான தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தீவிர ரசிகர்கள். இன்னும் சொல்லப் போனால் சச்சினின் ஆட்டத்தை பார்த்த பின்னரே, இவர்கள் மூவரும் கிரிக்கெட்டை இன்னும் தீவிரமாக நேசிக்க தொடங்கினார்கள் என்று சொல்லலாம்.
சச்சின் டெண்டுல்கருடன் தன்னை ஒப்பிட்டு பேசுவது குறித்து விராட் கோலி பேசுகையில், நீங்கள் யாருடன் ஒப்பீடு செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. சச்சினை பார்த்து தான் கிரிக்கெட் விளையாடும் ஆசையே எனக்கு வந்தது என்று பதில் அளித்தார். அதேபோல் சச்சின் பற்றி தோனியிடம் கேட்கையில், எனது நண்பர்களிடம் சச்சின் பேட்டிங் செய்ய வந்தால் உடனடியாக என்னிடம் கூறுங்கள் என்று சொல்லி வைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், எனது ஆதர்ச நாயகன், ரோல் மாடல் எல்லாமே சச்சின் தான் என்று கூறியுள்ளார். தோனி ருதுராஜ் கெய்க்வாட் கீழ் விளையாடுவதையும், ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியா கீழ் விளையாடுவதையும் பெருமையாக பேசும் வரும் இந்த தலைமுறையினர், சச்சின் டெண்டுல்கர் கங்குலி, ராகுல் டிராவிட், தோனி, கும்ப்ளே என்று ஏராளமான ஜூனியர் ருக்கு கீழ் விளையாடி இருக்கிறார்.
இதில் கங்குலி, டிராவிட், கும்ப்ளே, தோனி ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு முன்பாகவே சச்சின் டெண்டுல்கர் ஜாம்பவான் அந்தஸ்தை பெற்றுவிட்டார். இன்று தோனிக்கு மும்பை, டெல்லி, லக்னோ, ராஜஸ்தானில் ரசிகர்கள் கூடுவதை பார்த்து பிரமிக்கும் தலைமுறைக்கு மத்தியில், சச்சின் விளையாடினால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், துபாயில் ரசிகர்கள் கூடினார்கள் என்பதே இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத வரலாறு. கேஜிஎஃப் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவின் ஒரே பாட்ஷா சச்சின் டெண்டுல்கர் தான்.