மும்பை : டீப் ஃபேக் வீடியோ என்ற தொழில்நுட்பம் பல பிரபலங்கள் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. ராஷ்மிகா மந்தானாவில் தொடங்கி தற்போது கிரிக்கெட் வீரர் சச்சின் வரை இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
டீப் பேக் வீடியோ மூலம் சில விஷமிகளால் உருவாக்கப்படும் வீடியோ உண்மையா? பொய்யா என்பது கூட தெரியவில்லை.அந்த அளவு தெளிவாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஷமிகள் ஏமாற்றுகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது சச்சின் டெண்டுல்கர் டீப் ஃபேக் வீடியோவில் சிக்கியிருக்கிறார். அந்த வீடியோவில் சச்சின் தனது மகள் சாராவை பற்றி பேசுவது போல் வீடியோ வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதில் தனது மகள் ஆன்லைன் வீடியோ கேம் மூலம் பல பணத்தை சம்பாதித்து வருவதாகவும் இதனை ரசிகர்கள் நீங்களும் பயன்படுத்தலாம் என்று சச்சின் கூறுவது போல் டீப் ஃபேக் வீடியோ தொழில்நுட்பத்தை வைத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த வீடியோவை தற்போது பகிர்ந்து இருக்கும் சச்சின் டெண்டுல்கர் கடும் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார். இதில் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் சமூக வலைத்தள பயன்படுத்தவர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக வலைதள நிறுவனங்களும் இது போன்ற புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் இது போன்ற விஷமத்தனமான செய்திகள் மற்றும் டீப் பேக் வீடியோக்கள் தடுத்து நிறுத்த முடியும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோ தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் மன வருத்தத்தை கொடுத்து இருப்பதாகவும் தொழில்நுட்பத்தை வைத்து தவறாக வீடியோக்கள் உருவாக்கப்படுவதாகவும் சச்சின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ முற்றிலும் போலியானது. எனவே ரசிகர்கள் இந்த வீடியோ குறித்து சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு புகார் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். சச்சினின் இந்த வீடியோ ஒரிஜினல் போலவே அவருடைய குரலையும் பயன்படுத்தப்பட்டு எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.