
கேப்டன் சச்சின்
சச்சின் டெண்டுல்கர் இரண்டு முறை இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இரண்டு முறையும் அவர் ஏமாற்றத்தை மட்டுமே அளித்தார். சிறந்த பேட்ஸ்மேன் என அப்போதே உலகின் மொத்த கவனத்தையும் ஈர்த்த சச்சினால், அணியை திறம்பட வழிநடத்த முடியவில்லை.

8 ஆண்டு காலம் கழித்து..
1989ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன சச்சின், 1997இல் தான் முதன் முறையாக கேப்டன் ஆனார். சுமார் 8 ஆண்டு காலம் தன் தனிப்பட்ட ஆட்டத்திலேயே கவனம் செலுத்தி விட்டு பின் கேப்டன் பொறுப்பை அவர் ஏற்றதும் ஒரு முக்கிய காரணம்.

அசாருதீன்
சச்சின் டெண்டுல்கர் 1989இல் அறிமுகம் ஆன போது அணியில் கபில் தேவ், ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் ஆடி வந்தனர். அவர்கள் சென்ற பின் இந்திய அணிக்கு முகமது அசாருதீன் நீண்ட காலம் கேப்டனாக இருந்தார்.

எதிர்பார்ப்பு இருந்தது
பின் 1997இல் சச்சின் டெண்டுல்கருக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. அப்போது சச்சின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார். அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவரால் பெரிய அளவுக்கு வெற்றிகளை பெற்றுத் தர முடியவில்லை.

பயிற்சியாளராக கபில் தேவ்
இதை அடுத்து மீண்டும் அசாருதீன் கேப்டன் ஆனார். பின்னர் 1999இல் மீண்டும் சச்சின் கேப்டன் பதவியை பெற்றார். அப்போதும் அவரால் வெற்றிகளை பெற முடியவில்லை. அப்போது சச்சினுடன் அணியின் பயிற்சியாளராக கபில் தேவ் நியமிக்கப்பட்டு இருந்தார்.

கபில் தேவ் உதவுவார்
இந்தியாவில் நடந்த நியூசிலாந்து தொடரை இந்தியா வென்றது. அடுத்து ஆஸ்திரேலியா சென்றது இந்திய அணி. அனுபவம் வாய்ந்த கபில் தேவ் தனக்கு திட்டம் வகுக்க உதவுவார் என நம்பி இருந்தார் கேப்டன் சச்சின். ஆனால், அவர் எந்த உதவியும் செய்யவில்லை என தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

படுதோல்வி
அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா 3 - 0 என படுதோல்வி அடைந்தது. அப்போது இந்திய அணி மீதும், சச்சின் கேப்டன்சி மீதும் கடும் விமர்சனம் எழுந்தது. அதற்கு அடுத்து நடக்க இருந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன்பே தான் இந்த தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக சச்சின் அறிவித்து பரபரப்பை கிளப்பினார்.

பெரிதும் எதிர்பார்த்தேன்
இது பற்றி சச்சின் தன் சுயசரிதையில் கூறுகையில், இந்திய அணிக்கு ஆடிய சிறந்த வீரர், உலகிலேயே சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் என்பதால் அவர் ஆஸ்திரேலிய தொடரில் உதவுவார் என பெரிதும் எதிர்பார்த்தேன். அவரை விட யாரால் ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு உதவ முடியும்? என் தான் எண்ணியதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் உதவவில்லை
ஆனால், அவரது ஈடுபாடு, எண்ண ஓட்டம் அணியை வழிநடத்தும் வேலை கேப்டன் உடையது என்பதாக இருந்தது. அதனால், எந்த திட்டமிடலிலும் அவர் உதவவில்லை எனவும் குறிப்பிட்டு தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருந்தார் சச்சின்.


Click it and Unblock the Notifications











