மும்பை: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு, மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளான சானியா சந்தோக் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது. சாராவின் நெருங்கிய தோழியான சானியா சந்தோக் உடன் அர்ஜூன் டெண்டுல்கர் நீண்ட நாட்களாக காதலில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் அறிந்து இரு குடும்பத்தினரும் நேரில் சந்தித்து நிச்சயத்தை முடித்திருக்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம் முடிவடைந்திருப்பது பல்வேறு தரப்பினருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ஏனென்றால் மகள் சாரா இருக்க, முதலில் மகனுக்கு திருமணம் செய்து வைக்க சச்சின் முடிவு எடுக்க என்ன காரணம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அர்ஜூன் டெண்டுல்கர் விளையாடி வருகிறார். 25 வயதாகும் அவரும், சானியா சந்தோக்கும் நீண்ட நாட்களாகவே காதல் உறவில் இருந்துள்ளனர். இந்த விவகாரம் சச்சின் குடும்பத்தினருக்கும், ரவி காய் குடும்பத்தினருக்கும் தெரிய வந்துள்ளது. இதன்பின் இரு குடும்பத்தினரும் நேரில் சந்தித்து பேச, திருமண நிச்சயதார்த்தமே முடிவடைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இரு குடும்பத்தினரும், அவர்களின் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். சானியா சந்தோக்கை பொறுத்தவரை அவர் ஒரு கால்நடை மருத்துவர். படிப்பை முடித்துவிட்டு மிஸ்டர் பா'ஸ் பெட் மற்றும் ஸ்பா ஒன்றை நடத்தி வருகிறார். அதாவது செல்லப் பிராணிகளை அழகுபடுத்தும் ஒரு ஸ்பாவை நடத்தி வருகிறார்.
மும்பையைச் சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் சானியாவின் கஸ்டமர்கள் தான். இவரும் சாராவும் நீண்ட நாள் தோழிகள். இதனை சாராவின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களே உறுதி செய்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சாரா - சானியா தொடர்ச்சியாக பார்ட்டிகளில் கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் சகோதரி சாராவின் தோழியுடன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு நட்பு ஏற்பட்டு, அது பின்னர் காதலாக மாறி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்துள்ளனர். தற்போது காதலை அடுத்தக் கட்டத்திற்கு அர்ஜூன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் இருவரும் எடுத்து செல்ல முடிவு செய்து, வீட்டில் சம்மதம் பெற்று இருக்கின்றனர். இதனால் அர்ஜூன் டெண்டுல்கருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.