அகமதாபாத்: சாலை விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருக்கும் தனது நண்பர் தல்பீர் சிங்கின் மருத்துவ உதவிகளை சச்சின் டெண்டுல்கர் முழுமையாக ஏற்று அவருக்கு புது வாழ்வு கொடுத்துள்ளார்.
தல்பீர் சிங்கும், சச்சினும் 17 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாக ஆடியவர்கள். அப்போது ஒரே அறையில் தங்கியவர்கள் என்று தல்பீரின் சகோதரி சுக்பீர் கெளர் தெரிவித்தார்.
சுக்பீர் கூறுகையில், கடந்த 2002ம் ஆண்டு சாலைவிபத்தில் சிக்கினார் தல்பீர். அன்று முதல் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். தற்போது சச்சினின் உதவியால் அவருக்கு இடுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனால் அவரால் இயல்பாக நடக்க முடியும். சச்சினுக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம் என்றார்.
தல்பீரின் தாயார் சுக்தயாள் கெளரும், தனது மகனுக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது குறித்தும், சச்சின் செய்த உதவி குறித்தும் கண்களில் நீர் பெருக மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்தார்.
தல்பீர் குறித்து சச்சின் கூறுகையில், தல்பிர் வாழ்வில் மீண்டும் புன்னகையை கடவுள் கொடுக்க வேண்டும். ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்ததில் மிகவும் மகிழ்ச்சி. அவரது மருத்துவ ரிப்போர்ட்டை இந்திய கிரிக்கெட் போர்டின் மருத்துவ ஆலோசகர் ஆனந்த் ஜோஷிக்கு அனுப்பியுள்ளேன். அவரது பதிலுக்காக காத்திருக்கிறேன்''என்றார்.