ஹைதராபாத்: ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பெருமையை நிலை நிறுத்திய சாக்ஷி மாலிக், திபா கர்மாகர் மற்றும் சிந்துவிற்கு பிஎம்டபிள்யூ கார்களைப் பரிசளித்த சச்சின், பின்னர் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலமும், பேட்மிண்டன் வீராங்கனை சிந்து வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். இதேபோல், ஜிம்னாஸ்டிக் போட்டியில் நான்காவது இடத்திற்கு தேர்வாகி திபா கர்மாகர் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
இவர்களைக் கவுரவிக்கும் வகையில் ஹைதராபாத் நகரில் மிகப்பெரிய பாராட்டு விழா நடைபெற்றது. இதில், கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனை படைத்த சச்சின் தெண்டுல்கர் மற்றும் பல்வேறு விளையாட்டுத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த விழாவின்போது, ஒலிம்பிக் வீராங்கனைகள் மூவருக்கும் விலையுயர்ந்த (BMW) கார்களை சச்சின் பரிசாக அளித்தார். விழா மேடையில் மூன்று வீராங்கனைகளுடன், சிந்துவின் பயிற்சியாளரான கோபிசந்தும் கவுரவிக்கப்பட்டார்.
அப்போது பேசிய சாக்ஷி மாலிக், 'தான் சச்சினின் பரம ரசிகை' என்று குறிப்பிட்டார். மேலும், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த டெண்டுல்கருக்கு ஒரு கோரிக்கையை அவர் முன்வைத்தார்.
அதாவது, "என்னுடைய சகோதரராக நான் அன்பு வைத்துள்ள அவருடன் நானும் என் குடும்பத்தாரும் இணைந்து நின்று செல்பி எடுத்துகொள்ள சச்சின் அனுமதிக்க வேண்டும்" என்றார் சாக்ஷி.
இதனையடுத்து, விழா மேடைக்கு வந்த சச்சின், சாக்ஷி மாலிக் மற்றும் அவரது குடும்பத்தாருடன் இணைந்து நின்று செல்பி எடுத்து அவர்களை மகிழ்வித்தார்.
இதேபோல், பி.வி.சிந்து, அவரது பயிற்சியாளர் கோபிசந்த், திபா கர்மாகர் ஆகியோருடனும் சச்சின் செல்பி எடுத்துக் கொண்டார்.