மும்பை: சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் உலகம் முழுவதும் பல சாதனைகளை படைத்து பெயர் புகழுடன் இருக்கிறார் என்றால் அது விராட் கோலி தான். சச்சின் டெண்டுல்கரின் மகத்தான சாதனையை விராட் கோலி உடைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்.
இதனால் சச்சினின் டெஸ்ட் ரெகார்ட்டை முறியடிக்கும் வாய்ப்பு விராட் கோலிக்கு பறிபோனது. அது மட்டுமில்லாமல் சச்சினின் மற்ற சாதனைகளையும் இனி விராட் கோலி தொடுவது என்பது முடியாத காரியம் ஆக மாறிவிட்டது. இந்த நிலையில் விராட் கோலி ஓய்வு பெற்றிருப்பதற்கு சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் தற்போது நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டீர்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது நீங்கள் செய்த ஒரு விஷயத்தை என்னால் மறக்கவே முடியவில்லை. உங்களுடைய மறைந்த தந்தை கட்டி இருந்த ஒரு கயிறை எனக்கு நீங்கள் பரிசாக அளித்தீர்கள்.
அது என்னை தனிப்பட்ட முறையில் எதோ செய்துவிட்டது. நான் அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கின்றேன். நீங்கள் அன்று காட்டிய அன்பு என் வாழ்நாளில் எப்போதுமே இருக்கும். ஆனால் தற்போது என்னிடம் உங்களுக்கு திருப்பி பரிசளிக்க கயிறு வேறு எதுவும் கிடையாது. ஆனால் உங்கள் மீது நான் எப்போதும் நல்ல அபிமானத்தையும் வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கின்றேன்.
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் நமது இளைஞர்கள் பலரை கிரிக்கெட் பக்கம் அழைத்து வந்திருக்கிறீர்கள். கிரிக்கெட்டை ஒரு தொழில் முறை விளையாட்டாக எடுத்துக் கொள்ள பலரும் விரும்புகிறார்கள் என்றால் அதற்கு நீங்களும் ஒரு காரணம். உங்களுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை பல உச்சங்களை தொட்டு இருக்கின்றது.
வெறும் ரன்களை மட்டும் அல்லாமல் அதற்கு மேல் பலவற்றையும் இந்த இந்திய கிரிக்கெட்டிற்கு நீங்கள் வழங்கி இருக்கிறீர்கள். பல புதிய தலைமுறையினரை டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க வைத்த பெருமை உங்களுக்கு சேரும். உங்களுடைய ஸ்பெஷலான இந்த டெஸ்ட் கிரிக்கெட்டின் பயணத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக கூறியிருக்கின்றார்.