மும்பை : இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட வீரர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான். தற்போது சச்சின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்தார்.
உலக கிரிக்கெட்டில் எத்தனையோ சாதனைகளை தனக்கு சொந்தமாக மாற்றிய சச்சின் டெண்டுல்கர், பிடித்ததை செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் விளையாடி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஆனால் இன்றும் ரசிகர்கள் மத்தியில் சச்சினுக்கு ஒரு மவுஸ் இருக்கிறது. நமக்கு பிடித்த வீரர்களின் ஜெர்சியை அணிந்து கொண்டு கடைக்கு இல்லை வெளியே செல்வது வழக்கம். அப்போது நமக்கு பிடித்த வீரரின் ஜெர்சியை அணிந்து கொண்டு போகும் போது அந்த வீரர் நம்மை அழைத்து பேசினால் எப்படி இருக்கும். அதுதான் தற்போது நடந்திருக்கிறது.
இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட வீடியோவில், சச்சின் காரில் எங்கேயோ சென்று கொண்டிருந்தபோது, முன்னால் பைக்கில் சச்சின் பெயருடன் மும்பை இந்தியன்ஸ் ஜெர்ஸியை அணிந்து கொண்டு ரசிகர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த சச்சின் அந்த ரசிகரை சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக பின் தொடர்ந்து சென்று அவரிடம் நிறுத்தி விமான நிலையத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டார்.
சச்சினை பார்த்த உடன் அந்த ரசிகர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார். உங்களிடம் பேசி அறிமுகமாக வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் கனவு. உங்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று கூறினார். மேலும் சச்சின் அந்த ரசிகரை ஹெல்மெட் அணிந்து சென்றதற்கு வாழ்த்துக்கள்.நல்ல முடிவு என்று கூறினார். மேலும் அந்த ரசிகர் சச்சினின் புகைப்படங்களை தனது டைரியில் வைத்திருந்ததை எடுத்து காட்டினார்.

அதை பார்த்த சச்சின் அந்த ரசிகருக்கு ஒரு ஆட்டோகிராபையும் போட்டுக் கொடுத்தார். பிறகு இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அப்போது அந்த ரசிகர் என் வாழ்நாளில் என்னுடைய கடவுளை நான் நேரில் பார்த்து விட்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார். நீங்கள் என்னுடைய ஜெர்சியை அணிந்து கொண்டிருந்தீர்கள்.
அதை பார்த்தது தான் நான் உங்களை நிறுத்தினேன் என்று கூறி அந்த ரசிகருக்கு சப்ரைஸ் அளித்தார்.மேலும் அந்த வீடியோவில் நான் காரில் சீட் பெல்ட் அணிந்து இருக்கிறேன். அவர் ஹெல்மெட் அணிந்திருக்கிறார். இதேபோன்று போக்குவரத்து விதியை நாம் அனைவரும் பாலோ செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.