மும்பை : சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் பயிற்சி முகாமில் தன் பால்ய கால நண்பர் வினோத் காம்ப்ளிக்கு பந்து வீசினார்.
தான் பந்து வீசும் புகைப்படத்தை பகிர்ந்து, தன் மலரும் நினைவுகளை பற்றி கூறி இருந்தார் சச்சின். அந்த புகைப்படத்தில் சச்சின் கிரீஸ்-ஐ தாண்டி காலை வைப்பது தெரிந்தது.

அதைக் கண்ட ஐசிசி, தன் ட்விட்டர் பக்கத்தில் சச்சின் நோ-பால் வீசியதை குறிக்கும் வகையில், தன் காலத்தில் புகழ் பெற்ற அம்பயராக விளங்கிய ஸ்டீவ் பக்னர் நோ-பால் காட்டும் புகைப்படத்தை சேர்த்து வெளியிட்டனர். இதன் மூலம் லேசாக சச்சினை கிண்டல் செய்தது ஐசிசி.
இதற்கு சரியான பதிலடி அளிக்கும் வகையில் "நல்லவேளை இப்ப நான் பௌலிங் செய்றேன்.. பேட்டிங் ஆடலை.. அம்பயர் முடிவுதான் இறுதி முடிவு" என கூறி இருந்தார்.
இதில் என்ன பதிலடி என்கிறீர்களா? சச்சின் கிரிக்கெட் ஆடிய போது, குறிப்பிட்ட சில காலம் ஸ்டீவ் பக்னர் தொடர்ந்து தந்த தவறான தீர்ப்புகளால் சச்சின் ஆட்டமிழந்து வெளியேறி வந்தார். அப்போது ரிவ்யூ கேட்கவும் முடியாது.
அப்படி ஸ்டீவ் பக்னரால் பாதிக்கப்பட்ட சச்சின், இன்று விளையாட்டாக பயிற்சி முகாமில் பந்து வீசிய போது செய்த தவறை சுட்டிக் காட்டிய ஐசிசிக்கு, ஸ்டீவ் பக்னரை வைத்தே பதிலடி கொடுத்துள்ளார். சச்சின் ரசிகர்கள் இந்த பதிலடியை வரவேற்று கருத்து கூறி வருகிறார்கள்.